பிரதமர் மோடி நாளை வருகை : சென்னையில் 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் அவர் மெட்ரோ ரெயில் தொடக்க விழா உள்ளிட்ட நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக நாளை காலை 10.30 மணிக்கு விமானத்தில் சென்னை வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினாவில் உள்ள அடையாறு ஐ.என்.எஸ். தளத்தை வந்தடைகிறார்.
அங்கிருந்து கார் மூலமாக விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அதே நேரத்தில் விமான நிலையத்தில் இருந்து நேரு ஸ்டேடியம் வரையில் பிரதமரை காரில் அழைத்து வரலாமா? என்கிற ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து பிரதமர் செல்லும் வழித்தடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வரலாறு காணாத வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரதமரின் வருகையையொட்டி டெல்லியில் இருந்து அவரது பாதுகாப்பு அதிகாரிகளும், தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளும் இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை வந்துள்ளனர்.
விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்திற்கு சென்று அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். பிரதமர் காரில் பயணம் செய்யும் சாலைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
டெல்லியில் இருந்து வந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள் நேரு ஸ்டேடியம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அவர்களுடன் சென்னை மாநகர போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 2 நாட்களாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. லாட்ஜுகளில் சந்தேக நபர்கள் தங்கியிருக்கிறார்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரதமர் வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்திலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் செனனை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை.
மாநகர பஸ்கள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கீழ்கண்டபடி திருப்பி விடப்படும்.
- கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
- ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை, மிண்ட் சந்திப்பு, பேசின்பாலம், எருக்கஞ்சேரிரோடு, அம்பேத்கார் சாலை, புரசைவாக்கம் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.
- அண்ணா சாலையில் இருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்சர் பென்னிரோடு, மார்ஸல் ரோடு, நாயர் பாலம், டவுட்டன் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.
- சவுத்கெனால் ரோட்டில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply