இராணுவ வீரர்கள் அரசியலில் ஈடுபடுவதனை அரசாங்கம் தடுக்கவில்லை: கோத்தபாய

இராணுவப் படைவீரர்கள் அரசியலில் ஈடுபடுவதனை அசராங்கம் ஒருபோதும் தடுக்காது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்த வெற்றிகளில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பங்களிப்பை அரசாங்கம் உதாசீனப்படுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசியல் ரீதியாக வங்குரோத்தடைந்த சில அரசியல்வாதிகள் படைத்தரப்பை அரசாங்கத்திற்கு எதிராகப் பயன்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பாதுகாப்புப் படையினர் அரசியலில் ஈடுபடுவதனை அரசாங்கம் எதிர்க்கவில்லை எனவும், சீருடையில் இருந்து கொண்டு அரசியலில் ஈடுபடக் கூடாது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்கத்தை பலவீனமடையச் செய்ய எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து படைத்தரப்பைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டு அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்திருப்பதாகவும் அதனை தகர்த்து எறிவதற்கு எதிர்க்கட்சிகள் பல்வேறு சூழ்ச்சிகளை கட்டவிழ்த்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply