அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவது எமது பொறுப்பாகும் : பிரதமர்
அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவது எமது பொறுப்பாகும். நாட்டினுள் அனைவருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கவும் அவர்களின் தனித்துவ அடையாளங்கள் பேணவும் வழிசமைப்போம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டையில் நேற்று சனிக்கிழமை (15) நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் வெற்றிபெற்ற பிரதிநிதித்துவங்களுடன் அரசாங்கத்தினை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி என்ற தனியொரு கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
76வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட அரசியலில் இருந்து எமது மக்கள் இம்முறை மாற்றத்தை உருவாக்கியிருக்கின்றார்கள். இது தான் மிக முக்கியமானதொரு வெற்றியாக உள்ளது.
எமது அரசாங்கம் என்பது மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை உருவாக்குவதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட பிரதிநிதித்துவமாகும்.
இத்தனை வருடங்களாக இனங்களுக்கு இடையில் எட்டப்படாதிருக்கும் இன ஐக்கியத்தினை இத்தடைவை காண வேண்டும் என்பதே எமது ஒரே நோக்கமாகவுள்ளது.
எமது நாடு பல்வகைமையைக் கொண்டதாகும். அது பரந்துபட்டதாகும். அவ்வாறான நிலையில் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் சிறப்பானதொரு வாழ்க்கையை நாட்டிற்குள் வாழ்வதற்கான சமத்துவ உரிமை காணப்படுகின்றது.
அனைவரும் தமது அடையாளங்களை உறுதிப்படுத்தும் அதேநேரம், அனைவரும் ஒற்றுமையாக வேண்டிய அவசியமும் காணப்படுகின்றது.
இலங்கை என்பது எமது வீடு. எமது வீட்டுக்குள் பிரச்சினைகள் உள்ளன. எங்கு தான் பிரச்சினைகள் இல்லை. எமது வீட்டுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாங்கள் தான் தீர்க்க வேண்டும்.
வடக்கில் உள்ள தயார் ஒருவர் பாடசாலைக்கு தனது பிள்ளையை அனுப்பும்போது எதிர்காலத்தினை சிந்திப்பது போன்று தான் தென்னிலங்கையில் உள்ள தாயாரும் தனது பிள்ளையின் எதிர்காலத்தினைக் கருதுகின்றார்.
உள்நாட்டு போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். தங்களுடைய அதிகார பலம் வீழும்போது இனவாதத்தினை , மதவாதத்தினை ஏற்படுத்துவார்கள். அதனை மக்கள் தோல்வியடைச் செய்தபோதும் தற்போது இனவாதத்தினை, மதவாத்தினை தூக்கிப் பிடிப்பதற்கு முனைகின்றார்கள்.
அடுத்த ஒருமாதத்துக்குள் அவ்வாறு கூக்குரல் இடுபவர்கள் சத்தம் முழுமையாக நின்றுவிடும். அதன்பின்னர் எமது எதிர்காலத்தினை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க முடியும்.
புதிய அரசியலமைப்பை உருவக்குவது எமது இலக்குகளில் ஒன்றாகும். அந்த அரசியலமைப்பினை அனைவருடனும், கலந்துரையாடியே அவர்களின் தீர்மானத்துக்கு அமைவாக முன்னெடுப்போம். அது எமது பொறுப்பாகும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply