ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை (Reem Alabali-Radovan) சந்தித்து கலந்துரையாடினார்.
உலகளாவிய புதிய பொருளாதாரப் மாற்றங்களின்போது இரு நாடுகளும் எதிர்நோக்கும் பொதுவான சவால்கள் தொடர்பாக இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தக் கூடிய துறைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் நீண்ட வரலாற்றை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கை ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (Ceylon German Technical Training Institute (CGTTI) ) போன்ற தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கும் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்காகவும் ஜெர்மனி வழங்கும் பங்களிப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். அந்தப் பங்களிப்புகள் மற்றும் ஆர்வத்தையும் எதிர்காலத்தில் பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் மேம்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply