உணவக உரிமையாளரான பெண் சுட்டுப் படுகொலை பழிவாங்கும் நோக்கில் நடந்த பயங்கரம்
காலி மீடியாகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உணவக உரிமையாளரான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மீடியாகொடவைச் சேர்ந்த 47 வயதுடைய மகாதுர ரோசிகா ஷமீன் (ரோசி) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றது.
சீன உணவகத்தை நடத்தி வந்த ரோசி உணவகத்திற்குள் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த ரோசி பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோதிலும் உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 4 மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட மஹதுர நளீன் என்பவரின் சகோதரியே இவ்வாறு கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரந்தெனிய சுத்தாவின் மச்சான் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்திற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள், பத்தேகம பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
படபொல – பத்தேகம சாலையில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் இருந்ததாகவும், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து அது மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதனுடன், இவ்வருடம் இதுவரை நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. இதில் 54 பேர் உயிரிழந்துள்ளதுடன், 53 பேர் காயமடைந்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply