வடபகுதி மக்களுக்கு முழுமையான அரசபணி : ஜனாதிபதி
வெற்றி கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பது சகலரினதும் தலையாய கடமையெனவும் அதனைக் காட்டிக் கொடுக்க இடமளிக்கக் கூடாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வவுனியாவில் நேற்றுத் தெரிவித்தார்.நாட்டில் ஒரு அரசாங்கமே உள்ளதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, 20 வருடங்களுக்கு மேல் கஷ்டப்பட்ட மக்களுக்கு மன நிறைவான சேவையை வழங்க வேண்டுமெனவும் சேவை வழங்குவதில் இன, மத பேதங்கள், பாரபட்சங்கள் இருக்கக் கூடாதெனவும் வலியுறுத்திக் கூறினார்.
தம்மிடம்வரும் மக்கள் மனமகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்லும் வகையில் அதிகாரிகள் செயற்படுவது அவசியமெனவும் கருணையுடனும் அன்புடனும் அவர்களுக்கு சேவை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.மக்கள் சேவையே மகேசன் சேவை எனக் கொண்டு மக்களுக்கான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
வடக்கில் சில அதிகாரிகள் தம்மிடம் வரும் மக்களிடம் இன, குல பாகுபாடு காட்டி பாரபட்சமான வகையில் செயற்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எத்தகைய பேதம், பாரபட்சத்துக்கும் இடமின்றி சிநேகபூர்வமான சேவையை வழங்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
வட மாகாண அபிவிருத்திச் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்புத் தலைமையகத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்ஷ, ரிசாட் பதியுதீன், குமார வெல்கம உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட, பிரதேச செயலாளர்கள், மாவட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,
வட மாகாண மக்களுக்கான சகல குறைபாடுகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நான் அதிகாரிகளைப் பணித்துள்ளேன்.
இது விடயத்தில் அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் தமது மக்களுக்கு சேவை செய்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் மக்களுக்கான சேவையை செய்வதற்காக கடமைப்பட்டுள்Zர்கள் என்பதை ஒரு போதும் மறந்து விடக் கூடாது.
வடக்கில் பாதை, பாடசாலை அபிவிருத்தி, போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் என சகல அடிப்படை வசதிகளையும் துரிதமாகப் பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட அனைவருக்கும் அதற்கான பணிப்புரைகளையும் வழங்கினார். தாமதத்தினை தவிர்த்து சேவைகளை திருப்திகரமானதாக வழங்க சகலரும் அர்ப்பணிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply