நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்: பிரித்தானிய

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என பிரித்தானியா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக்கை இலங்கை வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று முன்தினம் சந்தித்தபோது நேரடியாக இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டது. இலங்கையில் ஏற்படுத்தப்படும் நிரந்தர அரசியல் தீர்வு அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டும் எனவும் ஹேக் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு பற்றி இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்ட அதேவேளை இந்த ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் வில்லியம் ஹேக் கேட்டுக் கொண்டார்.

போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், அனைத்துலக சட்ட மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் நியாயபூர்வமாகவும் சுயாதீனமாகவும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் தெளிவான கடப்பாட்டைக் கொண்டிருப்பதாக தாம் நம்புவதாகவும் ஹேக் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவை மட்டுமின்றி இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் தொடர்பாகவும் பிரித்தானிய இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடி இருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply