இலங்கை விவகாரம் குறித்து மன்மோகனுடன் பேசுவார் ஹிலாரி

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை புதுடில்லி செல்லவுள்ள ஹிலாரி கிளின்டன், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசவுள்ளார்.

இதன்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விவகாரங்கள் மட்டுமன்றி இலங்கை விவகாரம் தொடர்பாகவும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சு நடத்துவார் என்றும் அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மறுநாள் புதன்கிழமை இந்தோனேசியாவின் பாலித்தீவு செல்லும் வழியில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் சென்னைக்கு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் இலங்கை விவகாரம் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க காங்கிரஸ் வளாகத்தில் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்து அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.

அதேவேளை, இந்தியாவும் இதுபற்றி முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று முதன் முறையாக கூறியுள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலரும், இந்தியப் பிரதமரும் கலந்துரையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply