மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பு – பிரித்தானியா பாராட்டு
இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் கண்டிருக்கும் முன்னேற்றங்களுக்காக அவர்களை பாராட்டுவதாக இலங்கை வந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் குழு கூறியுள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்களை அந்த குழுவினர் சந்தித்தபோது, அந்தக் குழுவின் சார்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரான பாப் பிளக்மான்,
மூன்று வருடங்களுக்கு முன்பாகத்தான் ஒரு உள்நாட்டு போரினைச் சந்தித்து திரும்பியிருக்கும் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன என்று நான் நம்புகிறேன்.
பொருளாதார வாய்ப்புக்கள் மற்றும் மக்கள் தமது வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புக்கள் ஆகியன பாரியவையாக இருக்கின்றன. அவை நடந்துகொண்டும் இருக்கின்றன.
அப்படியான ஒரு இடத்தில் இது நடப்பது மிகவும் முக்கியமானது. ஆகவே இந்த விடயங்களில் கண்டிருக்கின்ற முன்னேற்றத்துகாக நாம் இலங்கை அரசாங்கத்தை பாராட்டுகிறோம்” என்றார் பாப் பிளக்மான் எம்பி.
இலங்கை சென்ற இந்த பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழுவில் 2010 ஆம் ஆண்டு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் 8 பேர் கான்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர்கள்.
இலங்கையின் போர் நடந்த பல பகுதிகளுக்கும் தாம் சென்று, பரந்துபட்ட மக்களையும் அவர்களது தலைவர்களையும் எந்தவிதமான பிறர் தலையீடும் இன்றி சந்தித்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
பிரிட்டனுக்கான இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விஜயத்துக்கு, அந்த தூதரகமே நிதி உதவி வழங்கியிருந்ததாகவும் அவர்கள் எமது செய்தியாளரிடம் கூறியிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply