தமிழக மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு

இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.  இதுதொடர்பாக பலமுறை இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த வித பலனும் இல்லை. இதனிடையே ராமேசுவரத்தில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். 

நேற்று இவர்கள் மீன் வளம் மிகுந்த இந்திய-இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் திரும்பி செல்லுமாறு எச்சரித்தனர்.

மேலும் அவர்கள் துப்பாக்கியை காட்டி, மிரட்டி மீனவர்களை விரட்டினர். தங்கச்சி மடத்தை சேர்ந்த மார்த்தாண்டம் என்பவரது படகில் ஏறி, அதிலிருந்த மீன் பிடி வலைகளை அறுத்து, கடலில் வீசினர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்து மீன்களையும் பறித்துக் கொண்டனர். உடனே உயிர் தப்பினால் போதும் என்று நினைத்த ராமேசுவரம் மீனவர்கள், அங்கிருந்து படகுகளுடன் கரைக்கு திரும்பினர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் எங்களால் கடலில் மீன்களை பிடிக்க முடிய வில்லை. இதனால் நாங்கள் பல நேரங்களில் வெறும் கையுடன் கரைக்கு திரும்பும் நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் எங்கள் வாழ்க்கையே கேள்வி குறியாகி விடும் என்று கவலையுடன் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply