அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மழை மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை உடனடியாக வழங்க, மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் தமிழ் தேசிய கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான அஸாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘கடந்த இரு தினங்களுக்கும் மேலாக நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வீசுகின்ற கடும் காற்று மற்றும் அடை மழை என்பன காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
அப்பாவி மக்களின் அன்றாட வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் பல கிராமங்களில் மக்கள் மூட்டை முடுச்சுகளுடன் சொந்த இடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்னும் சிலர் அதற்கு கூட வழியின்றி வெள்ள நீருடன் தமது வீடுகளே தஞ்சம் என்று தவித்து வருகின்றனர்.
உள்ளூராட்சி மன்றங்களிலும், மாகாண சபையிலும், நாடாளுமன்றத்திலும் இந்த மக்களின் பிரதிநிதிகளாக வீற்றிருக்கும் ஜாம்பவான்கள எங்கே என்று மக்கள் தேட ஆரம்பித்துள்ளனர். கதைகதையாக அள்ளி வீசி, வீராப்பு பேசி, மக்களை ஏமாற்றி வாக்குகளைச் சுருட்டி பதவிகளைத் தேடிக்கொண்டவர்களுள் ஒருவர் கூட இன்னமும் இந்த மக்களுக்கு உதவ முன்வரவில்லை என்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் காலத்தில் வாக்குகளைச் சுருட்டுவதற்காக எமது வாசல் கதவுகளை இவர்கள்; தட்டினார்கள். ஆனால் இன்று அந்த வாசல் கதவுகளை மூட வழியில்லாமல் வெள்ள நீரின் நடுவே திறந்து வைத்து காத்துக்கொண்டிருக்கின்றோம். எமக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குகளைச் சூறையாடிச் சென்ற இந்தப் பிரதிநிதிகள் இப்போது எங்கே என்று இந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்ட்டுள்ள மக்கள், தங்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இதுவரை அந்தப் பக்கம் தலைநீட்டக்கூட இல்லையே என்று மேலும் சீற்றம் அடைந்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் மக்களை நாடிச் செல்ல வேண்டிய நேரம் இதுதான்.
தங்களது மக்கள், வெள்ளத்திலும் காற்றிலும் அல்லலுறும்போது வெள்ள நீரும் காற்றும் நமக்கு அலர்ஜியே என்று வேறு இடத்தில் பதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பது மக்கள் பிரதிநிதிகளுக்கு அழகல்ல.
கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக தமது ஏனைய வேலைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு உடனடியாக தமது சொந்த இடங்களுக்குச் சென்று தமது அரசியல் அதிகாரம், செல்வாக்கு என்பனவற்றை முழுமையாகப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருந்து அவர்களுக்குச் சேர வேண்டிய அனைத்து நிவாரணங்களும் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என மிகவும் அன்போடு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்’ என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply