வீடமைப்பு திட்டத்தில் தலையிடாவிடின் இனவிரிசல் ஏற்படும் – இந்தியாவிற்கு நல்லெண்ண எச்சரிக்கை : மனோ கணேசன்
இந்திய அரசின் உதவியுடன் வடக்கில் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடி நிலைமைகளில் இந்திய அரசு உடனைடியாக தலையிட வேண்டும். இந்த திட்டம் மூலம் கட்டப்படும் வீடுகளை பெறுகின்ற பயனாளிகள் பாதிக்கப்பட்ட மக்களாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் நோக்கங்களை முன்னிறுத்தி நடைமுறையாகி, இறுதியில் இந்த உதவி திட்டம் இனங்கள் மத்தியில் விரிசலை ஏற்படுத்தும் உபத்திரமாக முடிந்துவிடக்கூடாது.
எனவே இத்திட்டம் நடைமுறையாவதை கண்காணிக்கும் அதிகாரத்தை நிதி உதவி செய்யும் இந்திய அரசு கேட்டு பெற வேண்டும். நல்லது செய்ய வந்து, இந்தியா கஷ்டத்தில் விழுந்து விடக்கூடாது. இது இந்தியாவிற்கு நாம் சொல்லும் நல்லெண்ண எச்சரிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழுவின் அழைப்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இந்திய அரசின் வீடமைப்பு திட்டம் நடைமுறையாகும் முறைமை குறித்து எழுந்துள்ள பதட்ட நிலைமைகள் பற்றி மன்னார், வவுனியா மாவட்டங்களில் வாழும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்த புகார்களை அடுத்து, இது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய தூதர் அசோக் கே காந்தாவுக்கு தான் இன்று காலை தனது கருத்துகளை அறிவித்துள்ளதாக கூறிய மனோ கணேசன் மேலும் தெரிவித்தாவது,
இந்திய அரசின் இந்த வீடமைப்பு திட்டத்தில் கட்டப்படும் வீடுகளை தமது அதிகாரத்தை கொண்டு கொண்டு ஒரு பிரிவினர் துஷ்பிரயோகம் செய்வதாக பரவலாக புகார்கள், மக்கள் கண்காணிப்பு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பெரும் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்ட இந்திய அரசின் வீடமைப்பு திட்டம் நீண்ட காலமாக முடிவின்றி தொடர்கிறது. இந்த திட்டத்தின் பயனாளிகளை தெரிவு செய்யும் முறைமையும், பயனாளிகளின் பெயர்களும் ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்களா என்பது பற்றி கண்காணிப்பு செய்யப்பட வேண்டும்.
இதை தமது அரசியல் நோக்கங்களுக்காக எவராவது பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு நிதி உதவி செய்யும் இந்திய அரசுக்கு இருக்கிறது. இந்த பொறுப்பை இந்திய அரசு உதாசீனம் செய்யக்கூடாது.
உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களை பயனாளிகளாக முறைப்படி அடையாளம் கண்டு அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படாவிட்டால், இனங்கள் மத்தியில் விரிசல் ஏற்படலாம் அதற்கான பதட்டம் இன்று சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் நிலவுகிறது. இது விரும்பத்தக்கது அல்ல.
எனவே இந்திய அரசு தாம் நிதி உதவி செய்யும் இந்த வீடமைப்பு திட்ட வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். இது முறைப்படி நடைபெறாவிட்டால், தவறுகளுக்கு இந்திய அரசும் பொறுப்பு ஏற்கவேண்டி வரும்.
யுத்தத்தில் அழிந்த வீடுகளை தமது குடிமக்களுக்கு கட்டி கொடுப்பது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு. இதையே இன்று இந்திய அரசு முன்வந்து செய்கிறது. எனவே, இந்திய அரசுக்கு கண்காணிப்பு அதிகாரம் வழங்கப்படாமலும், மறுபுறம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநீதியும் இழைக்கப்படுமானால் இந்த திட்டத்தில் இந்திய அரசு சம்பந்தப்பட்டு என்ன பயன்?
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply