இலங்கை – இந்திய உறவு தொடர்ந்தும் பாதிக்கப்பட்டால் கடும் விளைவு: சங்கரி எச்சரிக்கை

ஜெனீவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை கவுஸ்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பிர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி ஜனாதிபதிக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அக்கடிதம் பின்வருமாறு:

எனது அபிப்பிராயப்படி பொறுப்புள்ள சிலரின் பொறுப்பற்ற கூற்றுக்களால் மஹிந்த சிந்தனை தனது மதிப்பை இழந்து வருகிறதென மீண்டுமொருமுறை தங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன். இந்த துக்ககரமான நிலைமைக்கு பொறுப்பானவர்கள் உங்களுக்கு சங்கடமான நிலையை வேண்டுமென்றே தோற்றுவிப்பதோடு தெரிந்தோ தெரியாமலோ உங்களுடைய மதிப்பை குறைக்கின்றனர்.

இந்த போக்கை உடன் தடுத்து நிறுத்தவும். வரைமுறையற்ற சிலரின் கூற்றுக்கள் அடிக்கடி வெளிவருவதால் நாட்டின் நன்மைகருதி இதனை உடன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எமது மக்கள் ஞாபகசக்தி குறைந்தவர்கள். ஆனால் அரசாங்கத்தையோ தங்களின் ஆலோசகர்களையோ அப்படிச் சொல்ல முடியாது. பல தகவல்கள் உங்களின் வழிநடத்தலுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பதிவு செய்யப்படுகின்றன. அத்துடன் தங்களை வழிநடத்த ஊடகங்களும் உண்டு.

ஒரு சில நாடுகளைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு சகல நாடுகளும் முழு ஆதரவு வழங்கின. அவை தத்தம் நாடுகளில் விடுதலைப் புலிகளை தடைசெய்தும் இலக்கை அடைய பலவித உதவிகளும் புரிந்துள்ளன என்பதை தங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன். அத்தகைய நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் இன்றும் தடைவிதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. இப்போது சில நாடுகள் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானங்களை ஆதரித்தும், ஆதரிக்கவும் உள்ளமையால் அந்த நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவை என குற்றஞ்சாட்டுவது நீதி நியாயமற்ற செயலாகும்.

இலங்கையில் தூதரகங்களை வைத்துள்ள சகல நாடுகளுக்கும் தகவல்கள் சேகரிப்பதற்குரிய சகல ஏற்பாடுகளும் உண்டு. அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்களை அவர்கள் தமக்குள் பரிமாறிக்கொள்வர். இந்த விடயத்தில் ஒரு நாடும் இன்னொரு நாட்டை தனிப்பட்ட விசேட காரணங்கள் ஏதும் இருந்தால் அன்றி கட்டுப்படுத்த முடியாது. அரச சார்பற்ற நிறுவனங்கள் எதையும் பெயர் குறிப்பிடாது அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு கூலிப்படைகளை அனுப்பி உள்ளனர் என பல்வேறு அறிக்கைகள் பொறுப்பற்ற முறையில் வெளிவருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிகப் பாரதூரமான இக்குற்றச்சாட்டு, அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றை இயங்க விடாமல் செய்துள்ளது. இன்றும்கூட வடக்கு பிரதேசத்தில் இத்தகைய அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்க விடாது தடுக்கப்பட்டுள்ளமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வறுமையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தமக்கு உணவுப் பண்டங்கள் பிள்ளைகளுக்கு பால்மா போன்றவை பெறும் வாய்ப்பை இச்செயலால் இழந்துள்ளனர்.

யுத்தத்துக்கு முன்பும், யுத்தத்துக்கு பின்பும் இந்தியா முக்கிய பங்கு வகித்தும் வகிக்கவும் உள்ளது. தமிழ்நாட்டு பொலிஸார் எச்சரிக்கையாக இருந்தமையால் பல்லாயிரக்கணக்கான தொன் எடையுள்ள குண்டுகள் தயாரிப்புக்கு பாவிக்கப்படுகின்ற இரும்பு சன்னங்கள், வெடி மருந்துகள் வடக்கே பல பகுதிகளுக்கும், வடக்கிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய விளைவுகள் எமது கற்பனைக்கு அப்பாற்பட்டதாகும்.

இலங்கை இராணுவமே யுத்தத்தை வென்றதில் எதுவித சந்தேகமும் இல்லை. ஆனால் பொது மக்களுடைய ஒத்துழைப்பு இருந்தமையினாலேயே முன்னேற முடிந்தது. தமிழ் நாட்டு பொலிஸாரின் உதவியின்றேல் இந்த யுத்தத்தை வென்றிருக்க முடியாது. பல ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மாகாந்தி அவர்கள் இந்தியாவும், இலங்கையும் தமக்குள் சண்டையிட முடியாது எனக் கூறியுள்ளார்.

இலங்கையில் எல்லாம் நன்றாக இருப்பதாக நான் கூற வரவில்லை. இலங்கை தமிழர்களுக்கு பல ஆதங்கங்கள் உண்டு. உயர் மட்டத் தலையீடு தேவைப்படும் அளவுக்கு இவற்றில் சில கட்டுமீறி போகும் பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. நாம் விரும்பியோ விரும்பாமலோ இவ்விரு அயல் நாடுகளுக்கிடையில் இருந்த உறவு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலை தொடருமானால் மிக விரைவில் கடும் பாதிப்பு ஏற்படக்கூடுமாகையால் இரு நாடுகளும் இந்த போக்கை உடன் நிறுத்தி அவற்றின் நன்மையை மனதிற்கொண்டு தமக்குள் ஏற்பட்டுள்ள தப்பான அபிப்பிராயங்களை போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கூறப்பட்ட கருத்து தங்களால் மிக ஆழமாக பரிசீலிக்கப்பட வேண்டியதாகும். இலங்கை – இந்தியா ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் நல்லெண்ணமும் ஒற்றுமையும் நிலவுவதற்காக தமக்கிடையில் உள்ள குரோதங்களை இல்லாமல் செய்ய தீவிரமாக செயற்பட வேண்டும்.

அமெரிக்க தீர்மானங்கள் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் எடுக்கப்படும் போது இந்தியாவுக்கு ஒரு சங்கடமான நிலைமை ஏற்படாத வகையில் முதல் படியாக அதற்குரிய நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவிலிருந்து இலங்கை 22 மைல் நீளம் கொண்ட பாக்குத் தொடுவாயினாலேயே பிரிக்கின்றது. ஆகவே நம்மிரு நாடுகளும் மோதிக்கொள்ள முடியாதுதென்று மீண்டும் வற்புறுத்தி கூறுகின்றேன்.

ஜனாதிபதி அவர்களே! இந்தச் சந்தர்ப்பத்தில் வரவிருக்கும் அமெரிக்கத் தீர்மானமத்திற்கமைய நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இராணுவத்தினருக்குரிய சட்டரீதியான பாதுகாப்பையும் வழங்குவது தங்களுக்குரிய பாரிய கடமையாகும்.

இவ்வாறு ஆனந்த சங்கரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply