அமைதியாக இருக்கின்ற மலையகத்தினை காட்டுமிராண்டித் தனமான செயல்களில் ஈடுபட்டு குழப்ப முயல்கின்றனர்: இராதாகிருஷ்ணன் எம்.பி.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட எமது நடவடிக்கைகளுக்கு அரசியல் பின்னணியின் துணைகொண்டு பொலிஸார் இடையூறுகளை விளைவித்தனர். இது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறுகின்ற செயற்பாடாகும். இது தொடர்பில் பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி சபாநாயகரிடம் முறையிடப் போவதாக நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவருமான வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.கொட்டகலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்துக்கு நானும் பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரமும் கலந்துகொள்ள செல்கையில் பத்தனை பகுதியில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டோம்.
இந்த நாட்டில் எந்த பிரஜைக்கும் எல்லா இடத்துக்கும் எந்த நேரத்திலும் செல்வதற்கு உரிமை உள்ளது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களான நாம் பொலிஸாரின் பக்கசார்பான நடவடிக்கைகளினால் தடுத்து நிறுத்தப்பட்டோம். எமது ஆதரவாளர்கள் வந்த பஸ்களும் கொட்டகலைக்கு வராமால் இடைநிறுத்தப்பட்டன.
மேலும் கொட்டகலையில் மனோகணேசன் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் மதுபோதையில் வந்தவர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். இது தொடர்பில் பொலிஸார் எவரையும் கைது செய்யவில்லை. அத்தோடு ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நோக்கில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நாம் பொலிஸ் அனுமதி பெற்ற இடத்திலேயே மாற்றுத்தரப்பினரால் நடத்தப்பட்டது. இது ஜனநாயக விரோத செயலாகும்.
அமைதியாக இருக்கின்ற மலையகத்தினை காட்டுமிராண்டித் தனமாக ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு சிலர் குழப்ப முனைகின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply