மட்டக்களப்பில் புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வரவேற்பு நுழைவாயிலில் புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையினை கண்டித்தும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் இன்று (29) காலை கண்டன ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.
ஊறணி பிரதேச பொதுமக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர்.
பிள்ளையாரடியில் ஆரம்பமான இந்த பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம் (ஜனா), இரா.துரைரெட்னம், பிரசன்னா இந்திரகுமார், கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா, துரைராஜசிங்கம் உட்பட பொதுமக்கள், கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பிள்ளையாரடியில் ஆரம்பமான ஊர்வலம் புத்தர் சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு வரவேற்பு பலகை உள்ள இடம்வரையில் நடைபெற்றது.
இந்த கண்டனர் ஆப்பாட்ட பேரணியில் ஈடுபட்டோர் புத்தர் சிலை வைப்பதற்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.
அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் இந்துக்கள் வாழும் ஊரில் புத்தர் எதற்கு, புத்தரின் பெயரால் இன, மத சண்டைகளை உருவாக்காதே, புத்த பகவானை ஆக்கிரமிப்பு சிலையாக மாற்றாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட மட்டக்களப்பு மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி பிரிக்கேடியர் சுகத்த திலகரட்ன சிலை வைக்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களினால் மகஜர் ஒன்றும் கையளித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply