சட்டவிரோதமாக இத்தாலிக்குள் நுழைய முயன்றவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு முறையான ஆவணங்கள் இல்லாமல், சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகி உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் கடல்வழி பயணத்தை மேற்கொள்ளும்போது ஆபத்தில் சிக்க நேரிடுகின்றது. சென்ற வாரம் இத்தாலி நாட்டிற்கு கடல்வழியே குடியேறியவர்களின் எண்ணிக்கை 900-க்கும் மேல் அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் இதுபோல் கடல் வழியே இத்தாலிக்குள் நுழைய முயன்ற படகின் என்ஜின் பழுதடைந்த காரணத்தால் அதில் பயணம் செய்த 650 பேர் நடுக்கடலில் தத்தளித்தனர். அவர்களை கடலோரக் காவல்படையினர் பத்திரமாக காப்பாற்றி கரை சேர்ந்தனர். இந்நிலையில் நேற்றும் மத்திய தரைக்கடல் பகுதி வழியாக இத்தாலிக்குள் வரமுயன்ற இரண்டு படகுகள் பழுதாகி நடுக்கடலில் நின்றுவிட்டன. இந்த படகுகளில் பயணம் செய்த ஏராளமானோர் சிசிலி தீவு கரையோரம் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக கடலோரக் காவல்படையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல்படையினர் மீட்புப் பணியில் இறங்கினர். அப்போது பழுதாகி நின்ற இரண்டு படகுகளில் இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களை பத்திரமாக மீட்டனர். படகுகளில் சிலர் ரோந்து படையினரை கண்டதும் பயத்தில் கடலில் குதித்துவிட்டனர்.

அவர்களையும் கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். இதுபோல் எரிடோரியா நாட்டிலிருந்து வந்த 100 பேரும், மற்றொரு படகில் இருந்த 55 பேரும் லம்படூசா என்ற தீவில் இறக்கி விடப்பட்டனர். தட்பவெப்ப நிலை சீராக இருக்கும்பட்சத்தில் கடல் வழியாக இத்தாலிக்கு வருபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply