ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி சரத்குமார் தலைமையில் உண்ணாவிரதம்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் போன்றவை உள்ளன. ஆண்டுதோறும் இதற்கென தனி விழாக்களே நடைபெற்று வந்தன. இதில் இளைஞர்கள் திரளாக பங்கேற்று காளைகளை மடக்கி பிடிப்பது வாடிக்கை. மிகவும் கோலாகலமாக திருவிழாபோல் நடைபெறும் இந்த வீர விளையாட்டுக்களுக்கு சமீபத்தில் உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விளையாட்டு ஆர்வலர்களும், பொதுமக்களும் தடையை நீக்க வலியுறுத்தி கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தியும், உச்சநீதி மன்றம் விதித்துள்ள தடையை நீக்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் எதிரில் உள்ள திடலில் இன்று (சனிக்கிழமை) இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். ரேக்ளா வீர விளையாட்டு காளைகள் நலச்சங்க தலைவர் மோகன் சாமிக்குமார், வீராவயல் வேலுச்சாமி அம்பலம், சமத்துவ மக்கள் கட்சியின் துணைத்தலைவர் நாராயணன் எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கட்சி தொண்டர்கள் வீர விளையாட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் உள்பட பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கான ஏற்பாடுகளை சமத்துவ மக்கள் கட்சியின் மதுரை மண்டல செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை கணேசன் (மதுரை மாநகர் கிழக்கு), ஜெயக்குமார் (மாநகர் மேற்கு), டாக்டர் பிரபாகரன் (புறநகர் கிழக்கு) ஆகியோர் செய்திருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply