சவுதி அரசு மேற்கொண்டுள்ள விஸ்தரிப்புப் பணியில் முற்றிலும் மாறுபட்ட புனித மெக்கா நகரம்

முஸ்லிம் மக்கள் தங்களின் புனித நகரங்களாகக் கருதும் மெக்கா மற்றும் மதினாவிற்கு வாழ்வில் ஒரு முறையேனும் ஹஜ் என்னும் புனித யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று கருதுவர். உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம் மக்களால் மெக்கா நகரம் போற்றப்படுகின்றது. ஷியா, ஷன்னி, மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று எந்தப் பிரிவினைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போதிலும் அனைவரும் ஒன்றுகூடும் இடமாக மெக்காவின் புனித மசூதி விளங்குகின்றது.

காபா எனப்படும் இவர்களின் புனித வளாகத்தை ஏழு முறை சுற்றி வருவதன்மூலம் ஒருவரின் பாவங்கள் நீக்கப்படுகின்றன என்பது அவர்களின் நம்பிக்கையாகும். அதிகரித்து வரும் யாத்ரிகர்களின் வருகையை முன்னிட்டு இந்த நகரங்களுக்கான விஸ்தரிப்புப் பணியை கடந்த 2000-வது ஆண்டு மத்தியில் சவுதி அரசு தொடங்கியது.

தற்போது இன்னும் இதன் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் இருக்கின்றன. ஆனால் விரிவாக்கத்தின் விளைவாக தொன்மை வாய்ந்த பல பகுதிகள் அழிக்கப்பட்டு வண்ண விளக்குகள் பொருந்திய ஆடம்பர விடுதிகளும், வர்த்தக வளாகங்களும் அங்கு அதிகரித்துள்ளதாகப் பார்வையாளர்களில் பலர் கருதுகின்றனர்.

மெக்காவின் வரலாறும், உண்மையும் புல்டோசர்களாலும், டைனமைட்களாலும் அழிக்கப்பட்டுள்ளன என்று சமி அங்காவி என்ற கட்டிட வரைபடக் கலைஞர் வெளிப்படையாக விமர்சிக்கின்றார். இருப்பினும், தற்போதைய ஹஜ் பயணிகள் எண்ணிக்கையான 3 மில்லியன் என்பது வரும் 2040-ம் ஆண்டிற்குள் 7 மில்லியனாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும்போது நகர்ப்புற புதுப்பித்தல் என்பது அத்தியாவசியமான ஒன்றே என்று இங்குள்ள அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

நிதி நோக்கங்களும் இந்த விஸ்தரிப்புகளுக்கான ஒரு காரணமாக இருக்ககூடும் என்று இத்தகைய திட்டங்களை நிறைவேற்றிவரும் அரசு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான எஸ்ஸம் கல்தூம் ஏற்றுக்கொள்கின்றார். இருப்பினும் அதிகரித்துவரும் பயணிகளுக்கான வசதிகளை அளிப்பதில் இத்தகைய மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்பதையும் அவர் குறிப்பிடுகின்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply