ஜனாதிபதிக்கு பாகிஸ்தானில் செங்கம்பள வரவேற்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை பாகிஸ்தானை வந்தடைந்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி தலைமையிலான குழுவினரை சிந்து மாகாணத்தின் ஆளுநர் இஷ்ரத் உல் இபாத் கான் மற்றும் பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் எயார் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி ஆகியோர் வரவேற்றனர்.
அங்கிருந்து விசேட விமானம் மூலம் இஸ்லாமாபாத் நூர் கான் விமான தளத்தை வந்தடைந்த ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் அடங்கிய தூதுக் குழுவினரை பாகிஸ்தானின் சிரேஷ்ட அமைச்சர்கள் வரவேற்றனர். இதன் போது 21 வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு ஜனாதிபதிக்கு அரச மரியாதை செலுத்தப்பட்டது.
அங்கிருந்து தூதுக் குழுவினர் தங்கியிருக்கும் ஹோட்டல் சரேனாவை வந்தடைந்த ஜனாதிபதியை பாகிஸ்தானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். அத்துடன் இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி தலைமையிலான தூதுக் குழுவினருக்கு இராப்போசன விருந்துபசாரமும் அளிக்கப்பட்டது.
ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி ஆகியோரும் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளனர்.
அத்துடன் இராணுவ தளபதி லெப்டின்ன்ட் ஜெனரல் ஏ.டபிள்யூ.ஜே. கிரிஷாந்த டி சில்வா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி சித்ராங்கனி வாகிஸ்வரா, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.ஸுஹைர் உட்பட 40 பேர் அடங்கிய இலங்கை தூதுக் குழுவினர் பாகிஸ்தானுக்கு விஜயம் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியை வரவேற்கும் வகையிலும் இலங்கை மற்றும் பாகிஸ்தானின் உறவை பிரதிபலிக்கும் வகையிலும் இஸ்லாமாபாத் நகர் முழுவதும் பாரிய கட் அவுட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply