19இல் ஜனநாயகம், சுதந்திரம் நல்லாட்சிக்கான அம்சங்கள் : இரா. சம்பந்தன்
அரசியலமை ப்பின் 19ஆவது திருத்தமானது நிறைவேற்று அதிகாரம் எனும் இராட்சத சக்தியை இல்லாதொழித்து, ஜனநாயகம், சுதந்திரம் உள்ளிட்ட நல்லாட்சிக்கான உறுதிப்பாட்டு அம்சங்களை உள்ளடக்கியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட 19வது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சம்பந்தன் இங்கு மேலும் உரையாற்றுகையில்,
நிறைவேற்று அதிகார முறைமையினூடாக நாட்டு மக்கள் தங்களது சுதந்திரத்தை மட்டுமல்லாது இறைமையையும் கூட இழந்து காணப்பட்டனர்.மக்கள் தமது விருப்பின் பேரில் உறுப்பினர்களைத் தெரிந்து அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பது அவர்களுக்குரிய உரிமையாகும்.
இருந்த போதிலும் இன்றைய நிலையில் ஜனாதிபதிக்கு இருக்கும் அபரி மிதமான அதிகாரத்தினூடாக பாராளுமன்றத்தை ஒரு வருட காலத்துக்குள் கலைத்து விடுவதற்கும் இயலுமை காணப்படுகின்றது. இதன் காரணத்தால் நாட்டு மக்களின் இறைமையும் வாக்காளர்களின் உரிமையும் மீறப்படுகின்றது.
இருப்பினும் 19வது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு இருந்து வருகின்ற மேற்படி அதிகாரம் நீக்கப்படுகிறது. அத்துடன் சுதந்திரம் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் அம்சங்கள் உள்வாங்கப்படுகின்றன. 19வது திருத்தத்தின் ஊடான மேற்படி விடயங்கள் வரவேற்கக் கூடியவையாகும். அது மாத்திரமின்றி 19 வது திருத்தத்தினை நிறைவேறுவதன் மூலம் பாராளுமன்றத்தின் கெளரவம் பாரம்பரியமும் பாதுகாக்கப்படுகின்றது.
மேலும் அரசியலமைப்பு பேரவை மீளுருவாக்கம் பெறுகின்றது. நீதியரசர்கள் அரசியலமைப்புப் பேரவையின் சிபாரிசின் பிரகாரமே ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் நிலைமை உருவாக்கப்படுகிறது இது சிறந்த விடயமாகும்.
கடந்த காலங்களில் நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கையிழந்தே காணப்பட்டனர். ஆனாலும் இத் திருத்தம் நிறைவேற்றப்படுவதன் மூலம் நீதித்துறையில் சுயாதீன நியமனங்கள் இடம்பெறவுள்ளன. இதனால் நாட்டு மக்களுக்கும் நம்பிக்கை பிறக்கும்.
இது இவ்வாறிருக்க சுயாதீன ஆணைக்குழுக்களும் நியமிக்கப்படவுள்ளன. இவ்வாறு நியமிக்கப்படுகின்ற சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதுடன் அதனூடாக மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும்.
முன்னைய கால கட்டங்களின் போது மேற்படி ஆணைக்குழு நிறுவனங்களின் செயற்பாடுகளில் நிறைவேற்று அதிகாரத்தின் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்த நிலைமை காணப்பட்டது. ஆனாலும் 19இல் அது இல்லாதொழிக்கப்படுகின்றது.
இன்று ஜனாதிபதியாக இருப்பவர் மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்ற ஆசையைக் கொண்டிராதவராக இருக்கின்றார். அது மாத்திரமின்றி தனக்குள்ள அதிகாரங்களை குறைப்பதற்கும் அவற்றைப்பகிர்வதற்கும் தயாராக உள்ளவராகவும் இன்றைய ஜனாதிபதி திகழ்ந்து வருகிறார். இத்தகைய ஆரோக்கிய நிலைமையை பாராட்டியாக வேண்டும்.
ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரமானது இராட்சத அதிகாரமாக இருக்க முடியாது. அவ்வாறு அது உருவெடுக்காதவாறு நாம் பார்க்க வேண்டியுள்ளது. அவ்வாறான அதிகாரத்துக்கு இடமளிக்கும் பட்சத்தில் அது சர்வதிகாரத்துக்கு வழிவகுத்துவிடும். 18வது திருத்தத்தின் மூலம் இதற்கான வழிவகை ஏற்படுத்திக் கொடுத்தமை கவலைமிக்க விடயமாகவே அமைந்துள்ளது.
ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகுக்க முடியாது என்பது உலகின் பல நாடுகளில் சட்டமாக இருந்து வருகிறது. அவ்வாறே இலங்கையின் அரசியலமைப்பில் இருந்த சரத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் இங்கு ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதியாக வரமுடியும் என்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையானது நாட்டை சர்வதிகாரத்துக்குள் இட்டுச் செல்லும் விடயமாகும்.
இப்படியான நிலையில் தான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிப்பதற்கென கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் வாக்களித்ததன் மூலம் வெற்றிபெறவும் செய்தனர்.
அது மாத்திரமின்றி இந்நாடானது சர்வதிகாரத்துக்குள் இட்டுச் செல்லப்பட்டு விடக்கூடாது என்பதிலும் மக்கள் தெளிவாக வாக்களித்துள்ளனர். இதன் அடிப்படையில் தான் 19வது திருத்தம் இங்கு வந்துள்ளது.இவ்வாறான திருத்தம் இந்த சபையில் நிறைவேற்றப்படுவதன் மூலம் நாட்டின் ஜனநாயகம் சுதந்திரம் அதனூடான நல்லாட்சி என்பன பாதுகாக்கப்படுகின்றன என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply