தீவிரவாதத்துக்கு எதிராக மனிதகுலம் ஒன்றுபட வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு
இந்தியா, அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட 19 தனிப்பட்ட நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனை உறுப்பு நாடுகளாக கொண்ட பொருளாதார அமைப்பு ‘ஜி-20’ ஆகும். இதன் உச்சி மாநாடு, துருக்கி நாட்டில் ஆன்டல்யா நகரில், வரலாறு காணாத பாதுகாப்புக்கு மத்தியில் 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாடு நேற்று தொடங்கியது. இங்கிலாந்து நாட்டில் 3 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு, ஆன்டல்யா போய்ச் சேர்ந்தார்.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-
நாங்கள் எடுத்த துணிச்சலான சீர்திருத்த நடவடிக்கைகளால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது இன்னும் உயர வாய்ப்புள்ளது. இந்தியாவின் அளவை வைத்து பார்க்கும்போது, இந்நாடு உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் தூணாக மாற வாய்ப்புள்ளது.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனை 2022-ம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட்டாக உயர்த்த உறுதி பூண்டுள்ளோம். வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவதற்கு பல ஜி-20 நாடுகள் அதிக கட்டணம் விதிக்கின்றன. அந்த கட்டணத்தை குறைக்க வேண்டும். கருப்பு பணத்தை ஒழிக்க ஜி-20 நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.
தீவிரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த மனித குலமும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதற்கு உலக அளவில் அனைவரும் ஒன்றுபட்டு முயற்சி மேற்கொள்ளும் அவசர தேவை, இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. இதற்கு ‘பிரிக்ஸ்’ நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply