நவீனாவின் மரணத்திற்குக் காரணமான ஒருவரையும் விடக் கூடாது : டாக்டர் ராமதாஸ் ஆவேசம்

ramadasமாணவி நவீனாவின் கொலையின் பின்னணியில் உள்ள அனைவர் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மாணவி நவீனாவின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்குவதுடன், நவீனா உயிர்நீத்த ஆகஸ்ட் 3 ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக தேசிய அளவில் கடைபிடிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

காதலிக்க மறுத்தற்காக உயிருடன் எரிக்கப்பட்டு, புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த மாணவி நவீனா இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தனது உயிரையே விலையாகக் கொடுக்கும் அளவுக்கு நவீனா செய்த குற்றம் என்ன? என்பது தான் எனது மனதை குடைந்து கொண்டிருக்கும் வினா ஆகும். இந்த வினாவுக்கு விடையளிக்காமல் இந்த சோகத்தை தமிழ் சமுதாயம் கடந்து செல்ல முடியாது. ஏழைக் குடும்பத்தில் பிறந்த அம்மாணவி நன்றாக படிக்கக் கூடியவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயப் பட்டப்படிப்பு படித்து விவசாயிகளுக்கு சேவை செய்வது தான் அவரது லட்சியமாக இருந்தது என்பதை அவரது குடும்ப உறுப்பினர்களிடம் பேசியதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இன்று அவரது உடலைப் போலவே அவரது கனவும் கருகிக் கிடக்கிறது. இப்படி நடக்கும் அளவுக்கு அந்த சிறுமி செய்த பாவம் என்ன? பள்ளிக் கூடத்திற்கு சிற்றுந்தில் சென்ற அம்மாணவியை ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை செய்திருக்கிறார். இதனால் அம்மாணவியின் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்திற்கு பிறகு அம்மாணவி மீண்டும் பள்ளிக்கு செல்லத் தொடங்கிய சூழலில், அம்மாணவியின் குடும்பத்தினர் தனது கை, கால்களை வெட்டி விட்டதாக பொய்ப் புகார் கொடுத்து குடும்பத்தினரின் நிம்மதியை குலைத்திருக்கிறார் அந்த நபர். அப்போதும் அந்த நபரைக் கண்டிக்காத போலி புரட்சியாளர்கள், மாணவியின் குடும்பத்தினரையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் தான் சாதிய அடையாளத்துடன் விமர்சித்திருக்கின்றனர். அதன் விளைவாக அந்த நபர் ஆக்கமும், ஊக்கமும் பெற்று சாதிக்கத் துடித்துக் கொண்டிருந்த சிறுமியை உயிருடன் எரித்துக் கொன்றிருக்கிறார். அவருக்கு ஆதரவாக தொலைக்காட்சிகளிலும் பொதுவெளிகளிலும் வாய்கிழிய வக்காலத்து வாங்கியவர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்? தங்களின் தவறுகளையெல்லாம் மறைத்து விட்டு 4 பேருக்கு மட்டும் தெரியும் வகையில் அஞ்சலி செய்தியை பதிவிட்டு விட்டால் அவர்களின் பாவம் கரைந்து விடுமா? அல்லது அக்குடும்பம் அனுபவித்த வேதனைகள் இல்லை என்றாகிவிடுமா? விரும்பாத பெண்ணையும் விரட்டி விரட்டி காதலிக்கும்படி தூண்டியவர்களில் தொடங்கி, கயவன் என்று தெரிந்தும் வக்காலத்து வாங்கிப் பேசியவர்கள் வரை அனைவருமே மாணவி நவீனாவின் கொலைக்கு காரணமானவர்கள் தான். இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காமல் தடுக்க நவீனா கொலையின் பின்னணியில் உள்ள அனைவர் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி நவீனாவின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்குவதுடன், நவீனா உயிர்நீத்த ஆகஸ்ட் 3 ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக தேசிய அளவில் கடைபிடிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply