பிரதமரை சந்திக்கும் முன்பு டெல்லியில் போராடும் விவசாயிகளை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார்

டெல்லியில் மத்திய கொள்கை குழு (நிதி ஆயுக்) கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நாளை காலை நடைபெறுகிறது.இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு இரவு 8 மணியளவில் சென்றடைகிறார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அவர் ஞாயிறு காலை 9.45 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் உள்ள அரங்கில் உள்ள மத்திய கொள்கை குழு கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மற்ற மாநில முதல்-அமைச்சர்களும் பங்கேற்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு ஜந்தர் மந்தர் சென்று அங்கு தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்து பேசுகிறார்.விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 14-ந் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்களின் குறைகளை நேரில் கேட்டு பிரதமரிடம் அது சம்பந்தமாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்து சொல்ல உள்ளார்.

இதன் மூலம் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அய்யாக்கண்ணுவிடம் இதுபற்றி கேட்டதற்கு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்-அமைச்சர் உறுதி அளித்தால் எங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்றார்.

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் அய்யாக்கண்ணு கூறியதாவது:-

டெல்லி வரும் பழனிசாமி எங்களை சந்திப்பார் என்ற நம்பிக்கை உள்ளது..டெல்லியில் விவசாயிகளை முதலமைச்சர் நேரில்சந்தித்து உறுதியளித்தால் போராட்டம் வாபஸ் பெறப்படும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கவேண்டும் உபி போல தமிழக அரசும் விவசாயிகளின் தேசிய வங்கிக்கடனை ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply