சிங்கப்பூர் பெட்ரோல் பங்கில் கத்திமுனையில் கொள்ளையடித்த இந்தியர் கைது
சிங்கப்பூரின் மேல் புகித் சாலைப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் கடந்த 31-ந் தேதி இளம்பெண் ஒருவர் பணியில் இருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், அந்த பெண்ணிடம் கத்தியைக்காட்டி மிரட்டி பெட்ரோல் பங்கில் இருந்த 1,193 சிங்கப்பூர் டாலர்களை (சுமார் ரூ.57 ஆயிரம்) கொள்ளையிட்டுச் சென்றார்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொரு வாடிக்கையாளர், அந்த மர்ம நபரை விரட்டிச்சென்றார். பின்னர் இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், ஜுராங் கிழக்கு தெருவில் வைத்து அவரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் விஸ்வநாதன் வடிவேலு (வயது 48) என்ற இந்தியர் என தெரியவந்தது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறையும், 12 பிரம்படியும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்படுவது, கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என போலீசார் கூறியுள்ளனர். உபி எஸ்டேட் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் நேற்று முன்தினம் கத்தி முனையில் 2 ஆயிரம் டாலர் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த 2 சம்பவங்களும் கடந்த பல ஆண்டுகளுக்குப்பின் சிங்கப்பூரில் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply