சிரியாவில் உச்சகட்ட தாக்குதலில் காரணமாக ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்

சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும் இணைந்து செயல்படுகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

தெற்கு சிரியாவில் உள்ள ஆப்ரின் நகரத்தில் துருக்கி படைகளும் அதன் கூட்டாளிகளும் முற்றுகையை விலக்கியதை அடுத்து அங்கிருந்து நேற்று ஒரே நாளில் சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேறினர்.

கிழக்கு கூட்டா பகுதிகளில், சிரிய அரசு படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். இதனால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் தொலைத்துவிட்டு, உயிருக்கு பயந்து அவர்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போரினால் இதுவரை 1.2 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். சுமார் 61 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 56 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.

2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை அங்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply