பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை : அமெரிக்கா நடவடிக்கை

உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. ஆனால், அந்த நாடு பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதுடன், பயங்கரவாதிகளுக்கு ஆதரவுகரம் நீட்டி வருகிறது என அமெரிக்கா கருதுகிறது.

இதனால் அந்த நாட்டுக்கு வழங்கி வந்த 2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) நிதி உதவியை அமெரிக்கா அதிரடியாக நிறுத்திவிட்டது. மேலும் சொந்த மண்ணில் உள்ள பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அமெரிக்க தொடர்ந்து வலியுறுத்துகிறது. இதன் காரணமாக சமீபகாலமாக இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் செயல்பட்டு வரும் பாகிஸ்தானை சேர்ந்த 7 நிறுவனங்கள் அணு ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக அமெரிக்காவுக்கு சந்தேகம் எழுந்தது. அதனை தொடர்ந்து, அமெரிக்காவின் தொழில் மற்றும் பாதுகாப்பு, வர்த்தக அமைப்பு அந்த 7 நிறுவனங்கள் மீதும் பொருளாதார தடை விதித்தது.

இதுபற்றி அந்த அமைப்பு அமெரிக்க அரசின் இணையதளத்தில் “பாகிஸ்தானை சேர்ந்த 7 நிறுவனங்களும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை நலன்களுக்கு முரணாக நடந்துகொண்டது அமெரிக்க அரசால் உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவற்றின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன” என தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, அணுசக்தி வினியோக குழுவில் உறுப்பினராக வேண்டும் என போராடிக்கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply