இராணுவ நடவடிக்கைகளுக்காக துறைமுகம் பயன்படுத்தப்படமாட்டாது : ரணில் விக்கிரமசிங்க

ஹம்பாந்தோட்டை துறைமுகம் எந்தவித இராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.விமானங்கள் வராத விமான நிலையமாக மத்தள விமான நிலையம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், மத்தள விமான நிலையத்திற்கு விமானங்கள் எதிர்காலத்தில் வரும் என்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட விடயம் தொடர்பாகவும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும் நேற்று (05) பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றினார்.

இந்த உரையின் போதே பிரதமர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனாவுடன் நாம் சுயாதீன நாடு என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றோம். தற்பொழுது எமது கடன் சுமை குறைந்து வருகின்றது, வெளிநாட்டு நாணய இருப்பும் அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலம் இதுவரையில் 47 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தத் துறைமுகம் முறையான நடைமுறை விதிகளுக்கு அமைய அமைக்கப்படவில்லை.

அரசாங்கம் தனியார் நிறுவனத்தின் மூலம் இதன் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டுள்ளது. கப்பல்கள் வராத துறைமுகம் என்பதனால் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை காண்பதே இதன் நோக்கமாகும்.

இந்த துறைமுகம் தொடர்பில் சீன அரசாங்கம் எந்தவித அழுத்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான பணிகளை அரசாங்கத்துடன் சைனா ஹாபர் நிறுவனம் மேற்கொள்கிறது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் கைத்தொழிற்சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையம் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும் சிறந்த பெறுபேறு கிடைக்கவில்லை. இதனால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி இரண்டு பிரிவுகளைக் கொண்டது. இதன் ஒரு பகுதி தொடர்பில் தாம் பதில் அளிப்பதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply