பாராளுமன்றம் இன்று மீண்டும் கூடுகின்றது

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், புதிய அமைச்சரவைக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 122 பெரும்பான்மை ஆதரவுடன் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தார். இதனையடுத்து பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிதுமளி, அமைதியின்மை, கைகலப்பு போன்ற காரணங்களினால் சபாநாயகர் பாராளுமன்ற அமர்வின‍ை இன்று (19-11-2018) பிற்பகல் ஒரு மணிவரை ஒத்தி வைத்தார். இதற்கிணங்க இன்று பாராளுமன்றம் கூடவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே இன்று திங்கட்கிழமை கூடவுள்ள பாராளுமன்ற அமர்வின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணியினர் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கடந்த இரண்டுமுறை செய்யப்பட்டதை போலன்றி பெயர் அழைத்து நடத்தப்படும் வாக்கெடுப்பின் ஊடாக இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி முயற்சித்து வருகின்றது. அந்தவகையில் அவ்வாறு இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை தயாரிக்கும் முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி ஈடுபட்டுள்ளதாகவும் இன்றைய தினம் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என்று கட்சித் தகவல்கள் தெரிவித்தன. ஏற்கனவே கடந்த 14 மற்றும் 16 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.

அத்துடன் கடந்த 15 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை மீது நம்பிக்கையில்லை என்று எதிர்த்தரப்பில் முன்வைக்கப்பட்ட யோசனையும் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையிலேயே ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் இன்று மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதேவேளை, நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் பங்கேற்கவில்லை, எனினும் பாராளுமன்றில் எவ்வித மோதல்களுமின்றி சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க குறித்த சர்வ கட்சிக் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இலத்திரனியல் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் கோரி பெரும்பான்மையை காண்பிப்பது உகந்ததென்றும் குரல் மூலம் பெரும்பான்மையை காண்பிப்பது உகந்ததல்லவென்றும் ஜனாதிபதியால் நேற்றைய சர்வகட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குறித்த சர்வகட்சி கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply