கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்தால்தான் தேவையான உதவிகள் கிடைக்கும் : தம்பிதுரை
கரூர் ஜெகதாபி ஊராட்சி பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்வர் பழனிசாமி ஏற்கனவே புயல் பாதித்த மாவட்டங்களை பார்வையிட்டார். அதன் பின்னர் பிரதமரை சந்தித்து நிவாரண தொகை கேட்டார். பிரதமரும் அன்றே மத்திய குழுவை அனுப்பி வைத்தார்.
கஜா புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். அப்போது தான் தேவையான உதவிகள் கிடைக்கும். அதை மத்திய அரசு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.
நிவாரண உதவி தொகைக்கான உத்தரவினை பெற்றவர்களுக்கு நிச்சயம் பணம் வங்கி கணக்கிற்கு வரும். மு.க. ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோதுதான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுத்தார்.
இப்போது எதிர்கட்சியாக இருப்பதால் ஆளுங்கட்சியை குறை சொல்கிறார். ஸ்டெர்லைட் வழக்கை எப்படி நடத்த வேண்டும் என அரசுக்கு தெரியும். வல்லுநர்கள் இருக்கிறார்கள். இதோடு எதுவும் முடிந்துவிடாது.
மறு ஆய்வு மனு மீண்டும் தாக்கல் செய்ய முடியும். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பது எடப்பாடி அரசின் முடிவான கொள்கை. எடப்பாடியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அதற்கான முடிவினை எடுத்து செயல்படுகிறார்கள்.
வைகோ மூத்த அரசியல் தலைவர், போராளி. எனக்கு அண்ணன் மாதிரி. தி.மு.க.வின் நிலைபாடு தொடர்பாக அவர்தான் விளக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டதாக வைகோ பாராட்டியுள்ளார். அது உண்மை தானே.
கரூர் பாராளுமன்ற தொகுதியில் இதுவரை 8 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று இருக்கிறேன். இதற்கு முந்தை எம்.பி.க்கள் யாராவது இத்தனை கிராமங்களுக்கு சென்றார்களா? இது அரசியல் ஆதாயத்திற்காக அல்ல. வாக்களித்த மக்களை சந்திப்பது என் கடமை.
எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வெற்றி தோல்வி பற்றி எனக்கு கவலை இல்லை. கஜா புயல் பாதிப்பை பார்த்து மத்திய குழுவினரே கண் கலங்கினார்கள். ஆகவே நிச்சயம் பிரதமர் தேவையான நிவாரண தொகையினை ஒதுக்குவார் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply