நல்லூரில் பெருமளவு இராணுவம் அதிரடிப்படை குவிப்பு வீதிகள் மூடப்பட்டன

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக அநாமதேய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆலயத்தை சூழவுள்ள சுற்று வீதிகளின் போக்குவரத்து தடை செய்யப்பட்டும், அங்கு அதிகளவான இராணுவம், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான நிலை காணப்படுகின்றது.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் ஆலய சூழலுக்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பக்தர்கள் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவதால் பக்தர்கள் மத்தியில் அச்சமான மனநிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வடமாகாண ஆளுநருக்கு முகவரியிடப்பட்டு அநாமதேய கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. அக் கடிதத்தில் எனது கணவரும், வேறு சிலரும் இணைந்து நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளதாக எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.

குறித்த அநாமதேய கடிதம் தொடர்பில் ஆளுநர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து குறித்த பாதுகாப்பு கெடுபிடிகள் நல்லூர் ஆலய வளாகத்திலும், அதனை சூழவுள்ள பகுதிகளிலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நாளையதினம் தாக்குதல் நடத்தப்போவதாக கிடைத்த அநாமதேய கடிதத்தினையடுத்து நல்லூரில் தீவிர தேடுதலில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இராணுவத்தினரும் இணைந்து இந்த தேடுதலினை முன்னெடுத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply