பிரான்சில் வெயிலுக்கு 1,435 பேர் பலி

பிரான்சில் கோடை காலமான கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது. அனல்காற்று வீசியது. அங்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இதன்காரணமாக பிரான்சில் பல முறை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டதுடன், பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. வெயில் தாக்கத்தினால் பலர் உயிர் இழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பிரான்சில் கோடை வெயிலுக்கு 1,435 பேர் பலியானதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. ரேடியோ ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி ஆக்னஸ் புசின் இந்த தகவலை கூறினார். அனல்காற்று வீசியதால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டார். இதேபோல் மற்ற ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, லக்சர்ம்பெர்க் மற்றும் நெதர்லாந்திலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவானது. எனினும் கோடை வெயிலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை, பிரான்ஸ் நாட்டை தவிர வேறு எந்த நாடும் வெளியிடவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply