800 குஞ்சுகளுக்கு தந்தை ஆன 100 வயது ஆமை

ஈகுவடார் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது, கலபாகோஸ் தீவு. இது, பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு, அழிந்து வரும் இனமான ‘செலோனாய்டிஸ் கூடன்சிஸ்‘ என்ற ராட்சத ஆமை இனத்தை பெருக்க சுற்றுச்சூழல் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக, அதே இனத்தில் 3 ஆண் ஆமைகளையும், 12 பெண் ஆமைகளையும் தேர்வு செய்தனர். அவற்றில் ஒரு ஆண் ஆமை, 40 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் டியாகோ மிருகக்காட்சி சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட ‘டியாகோ‘ என்ற ஆமை ஆகும். அப்போதே அதன் வயது 60.
கலபாகோஸ் தீவில், 3 ஆண் ஆமைகளையும், 12 பெண் ஆமைகளையும் அடைத்து வைத்து இனப்பெருக்க நிகழ்வை அதிகாரிகள் நடத்தினர். இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது. தற்போது, அங்கு 2 ஆயிரம் ஆமைகள் நடமாடுகின்றன. அவற்றில் 800 ஆமைகளுக்கு ‘டியாகோ‘ ஆமைதான் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, தீவில் உள்ள 40 சதவீத ஆமைகள், டியாகோவின் பிள்ளைகள் ஆவர். இனப்பெருக்க நிகழ்வில், ‘டியாகோ‘ தீவிரமாக பங்கெடுத்து, தனது இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றி விட்டதாக அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
தற்போது, டியாகோவுக்கு 100 வயது ஆகிறது. அதனால், அதற்கு ஓய்வு கொடுக்கும்வகையில், அதன் பிறப்பிடமான எஸ்பனோலா தீவில் உள்ள காட்டுக்கே அதை அனுப்பி விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வருகிற மார்ச் மாதம், ‘டியாகோ‘ அங்கு விடப்படுகிறது. இனிமேல், கலபாகோஸ் தீவில், ராட்சத ஆமைகள் இயல்பாகவே வளரக்கூடிய சூழ்நிலை நிலவுவதாக அதிகாரிகள் கூறினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply