ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சிறைவைக்கப்பட்ட ராணுவத்தினர் 62 பேர் மீட்பு

ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கர அமைப்பு உள்நாட்டு அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது. மேலும், தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர்.

இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க ஆப்கானிஸ்தான் அரசுப்படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாதிகள் சில சமயங்களில் அரசுப் படை வீரர்கள், அதிகாரிகளை கடத்திச்சென்று தங்கள் மறைவிடங்களில் உள்ள சிறைகளில் அடைத்து வைத்து கொடுமைபடுத்தி வருகின்றனர்.

இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறிவருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் பேட்ஹிஸ் மாகாணத்தின் பாலா முர்ஹப் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு ராணுவத்தினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ராணுவ அதிகாரிகள் 62 பேர் மீட்கப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply