நல்லிணக்க முனைப்புக்களில் அரசாங்கம் கூடுதல் சிரத்தை காட்டவில்லை : ஆனந்தசங்கரி

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் அரசாங்கம் கூடுதல் சிரத்தை காட்டவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமொன்றுக்கு அறிவித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்கள் தற்போது சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சகல இடங்களிலும், சகல சந்திகளிலும் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நூற்றுக் கணக்கான கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வடக்கில் நடத்தப்பட்டதாகவும், தற்போது அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து தப்பிச் சென்ற மக்களுக்கு இராணுவத்தினர் பாரியளவு மனிதாபிமான தொண்டுகளை ஆற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்காக இராணுவத்திற்கு நன்றி பாராட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இராணுவத்தினர் மிகவும் சிறந்த முறையில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது போன்ற அனுபவங்களை மக்கள் தொடர்ந்தும் அனுபவிக்க இடமளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் தடவையாக ஜனாதிபதி நாட்டின் சகல பாகங்களுக்கும் சுதந்திரமாக செல்கின்றார் எனவும், இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள இயங்க முடியாது என்பது புலனாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்து விட்டதாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் தெரிவித்து வருவதாகவும் இவ்வாறான ஓர் நிலையில் ஏன் இராணுவத்தினரை வடக்கில் கூடுதலாக நிலை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர்கள் கோயில் கூட்டமொன்றை நடத்தினாலும் அங்கு இராணுவத்தினர் பிரசன்னமாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத்தினரை நிலை நிறுத்துவது பொருத்தமாக அமையாது, அதனை விடவும் குறித்த பிரதேசங்களில் சில காவல் நிலையங்களை அமைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். பலவந்தமான முறையில் தமிழர்களை இராணுவம் நிகழ்ச்சிகளில் இணைத்துக்கொள்ள முயற்சிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிஙகள் மக்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள் எனவும் , பல சிங்கள நண்பர்கள் தமக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அரசியல்வாதிகளே இனவாதத்தை விதைத்து பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதாக உணர்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் வடக்கில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்ற போதிலும் தாம் எவ்வித அபிவிருத்தியையும் காணவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் 47 பில்லியன் ரூபாவினை அபிவிருத்திக்காக செலவிட்டுள்ளது, எனினும் எவ்வாறு செலவிடப்பட்டது என்பது கேள்விக்குரியாகவே அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் காணப்படும் ஹோட்டல்களை இராணுவத்தினர் நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

செனட் சபையின் மூலம் எவ்வித தீர்வும் கிடைக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யதார்த்தமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு மெய்யாகவே முயற்சி எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் பல இன, பல மத மக்கள் வாழ்கின்றார்கள் என்பதனை நினைவில் நிறுத்தி தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் அரசாங்கம் பாரிய தவறை இழைத்துள்ளது. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply