கிளிநொச்சி தாக்குதலுக்கும் எமக்கும் எதுவித தொடர்புகளும் இல்லையாம் : ஈ.பி.டி.பி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் மீது கிளிநொச்சியில் ஈ.பி.டி.பி.யின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் தாக்குதல் நடத்தியதாக இணையத்தளமொன்றில் வெளியிடப்பட்ட செய்தி முற்றிலும் தவறானது என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் மறுப்பு தெரிவிக்கையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தம்முடன் வெளிமாவட்டங்களில் இருந்து பெருந்தொகையான இளைஞர்களை அழைத்து வந்து எல்லா இடங்களிலும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியிருந்தனர்.
எனினும் நாம் மிகவும் பொறுமையைக் கடைப்பிடித்து எமது அரசியல் பணிகளையும் தேர்தல் பணிகளையும் மேற்கொண்டு வந்தோம்.
நேற்று தேர்தல் நடைபெற்ற வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட நெருக்கடிகளைப் பற்றிய முறைப்பாட்டை நாம் தேர்தல் ஆணையாளருக்கும் தெரியப்படுத்தியிருந்தோம்.
இதேவேளை ஒரு இளைய சமூகத்தினரை இவ்வாறான குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக பாதிக்கப்பட்ட மக்களின் மத்தியில் செயற்பட வைத்தமையானது கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு அதிக கசப்பையே ஏற்படுத்தியது.
கடந்த காலத்தில் எம்மால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பணிகளிலும் அபிவிருத்திப் பணிகளிலும் அவதானத்தைச் செலுத்தி எமக்கான தமது ஆதரவை வழங்கி வந்த மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி அவர்களைத் தமது பக்கத்துக்குத் திசை திருப்பும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சியைச் சேர்ந்த சிலரும் கிளிநொச்சிச் செய்திகளை முதன்மைப்படுத்தும் இணையத்தளமும் பல பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
இதேவேளை, நேற்று மாலை கிளிநொச்சிப் பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் திரு.லோகேஸ்வரன் என்பவர் மீதான தாக்குதலுக்கும் எமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகவே மறுக்கிறோம்.
இந்தக் குற்றச்சாட்டானது, எமது ஆதரவைக் குறைப்பதற்கும் எம்மீது வீண் பழி சுமத்துவதற்குமே திட்டமிடப்பட்டு செய்தியாக்கப்பட்டுள்ளது.
ஒரு உயரிய பண்பாட்டையுடைய அமைதியும் நேர்மையுமான ஜனநாயக அரசியல் பாரம்பரியத்தைக் கட்டி வளர்த்து அதன் மூலம் மக்களுக்குப் பயன்தரும் அரசியல் பணிகளை முன்னெடுப்பதற்காகவே நாம் இந்தப் பாதிக்கப்பட்ட மக்களின் மத்தியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கிளிநொச்சி மாவட்ட மக்கள் நன்றாக உணர்வார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
வன்முறையைத் தூண்டும் அரசியலுக்கு யார் வழிகோலுகின்றனர் என்று மிக விரைவில் மக்கள் அறிந்து அந்தச் சக்திகளை இனங்காண்பர் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply