மன்னாரில் மேல் நீதிமன்றம் திறப்பு
மன்னாரில் மேல் நீதிமன்றம் ஒன்று புதிதாக திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் அவர்கள் இந்த நீதிமன்றக் கட்டிடத்தை வைபவரீதியாகத் திறந்து வைத்துள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் நாட்டின் பல்வேறு இடங்களிலுமுள்ள பலதரப்பட்ட சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
எனினும், இவர்களில் பலருக்கு எதிராக இன்னும் வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் வழக்குகள் வருடக்கணக்காக நீதிமன்றங்களில் தாமதமடைந்திருப்பதாகவும் மளித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதேவேளை, தமது வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் அல்லது தங்களைப் பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டுள்ள கைதிகள் கோரியிருக்கின்றனர். குற்றச்சாட்டுக்களின்றி சிறைச்சாலைகளில் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இவர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் மன்னாரில் மேல் நீதிமன்றத்தைத் திறந்து வைத்ததன் பின்னர் அங்கு கருத்து வெளியிட்ட யாழ் மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் அவர்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை மிக விரைவாக விசாரணை செய்து தீர்மானிப்பதற்கு வசதியாக மேலதிகமாக மூன்று நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்திருந்தது. இதற்கமைவாக பூஸா சிறைச்சாலையில் மூன்று நான்கு வருடங்களாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு நிவாரணமளிக்கும் நோக்கத்துடன் இந்த நீதிமன்றத்திற்கு உரிய வழக்குகளுக்கான ஆவணங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். அத்துடன், இந்த நீதிமன்றத்தில் மேல் நீதிமன்றம் ஒன்று மேற்கொள்கின்ற ஏனைய மேன்முறையீடுகள் மீளாய்வு விண்ணப்பங்கள் என்பனவும் விசாரணை செய்யப்படும் என்றும் அவர் கூறியிருக்கின்றார். இந்தப் புதிய மேல் நீதிமன்றத்தின் மேல் நீதிபதியாக மேல் நீதிமன்ற ஆணையாளர் எஸ்.தியாகேந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply