இலங்கை அரசின் வேண்டுகோளை பிரித்தானியா நிராகரிப்பு
இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டுக் குடிமக்களுக்கு விடுத்திருந்த பயண எச்சரிக்கையை பிரித்தானியா மீண்டும் புதுப்பித்துள்ளது.
ஆனால் இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்குமாறு வெளிவிவகார அமைச்சு கோரியிருந்த போதிலும் – பிரித்தானியா அதில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
புதுப்பிக்கப்பட்ட இந்த பயண எச்சரிக்கை அறிவிப்பை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் நேற்று வெளியிட்டது.
புத்தர்சிலைகளின் ஒளிப்படங்களின் முகப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பயண எச்சரிக்கை குறிப்பில் உள்ளூர் சட்டங்கள் சுங்கப் பிரிவு குறித்த மேலதிக தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
எனினும் ஒட்டுமொத்த பயண எச்சரிக்கை அறிவுரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 14ம் நாள் வெளியிடப்பட்ட பயண எச்சரிக்கைக் குறிப்பில், இலங்கையில் தேசியவாத எழுச்சி நிலவுவதாலும், மேற்குலக எதிர்ப்பு தீவிரமாக உள்ளதாலும், பாலியல் குற்றங்கள் அதிகளவில் இடம்பெறுவதாலும் அங்கு செல்லும் பிரித்தானிய குடிமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துகளை நீக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு பிரித்தானியாவிடம் கோரியிருந்தது.
எனினும் இலங்கைஅரசின் அந்த எதிர்ப்பை கருத்தில் எடுக்காத பிரித்தானியா, பயண எச்சரிக்கையில் மாற்றம் செய்யுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply