அரசு தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கப்போவதில்லை!
13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவிக்கும் கருத்து அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் அதிகாரப்பகிர்வை வழங்கப்போவதில்லை என்பதற்கான உறுதி மொழியாகும். அவர் அரசின் உண்மையான உறுதிப்பாட்டை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என மேல் மாகாண சபை உறுப்பினர் ந.குமரகுருபரன் தெரிவித்தார்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபயராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்து குறித்து அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலம் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திக்கு இடையூறாக இருப்பதனால் அதனை இல்லாதொழிக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். இவரின் இத்தகைய கருத்து பாரதூரமானது எனத் தெரிந்திருந்தும் கூட இவ்விடயம் குறித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனிகளாக இருப்பது வேதனை தருகிறது.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலத்தை நீக்குவதும் அதிகாரங்களைப் பறிப்பதும் மிகவும் பாரதூரமான பாதகமானது எனக்கூறும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இனப்பிரச்சினை தீர்வுக்கு கையாலாகாதவர்கள் எனினும் அரசின் கரங்களைப் பலப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை விட மேலானவர்கள்.
கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாகவே 13 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை இல்லாதொழிக்க அரசு எடுத்த தீர்மானம் இந்தியாவுடனான நட்புறவை பாதிக்கும் அதே வேளை தமக்கு எவ்வித அரசியல் தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்ற அவ நம்பிக்கையையும் தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கும்.
அரசின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்øனத் தெரிவு செய்த சமூகத்துக்காக ஏன் குரல்கொடுக்க மறுக்கின்றார்கள். தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதனை தட்டிக்கேட்காது மௌனமாக இருப்பதா தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் கைங்கரியம் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply