அரசாங்கம் அழுத்தங்களுக்கு ஒரு போதும் அஞ்சாது!

ஜெனீவாவில் நடைபெற உள்ள மனித உரிமை பேரவை கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது. தவறு செய்த உணர்வு அரசாங்கத்துக்கு இல்லாத நிலையில் இத்தகைய அழுத்தங்களுக்கு நாம் அஞ்சவில்லை. புலிகளுக்கு உதவிய குழுக்கள் தொடர்ந்து செயற்படுவதாலே இடைக்கிடை இவ்வாறு சவால்கள் எழுவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளில் பாதிக்கு மேல் அமுல் படுத்தப்பட்டுள்ளது. மத்திய கால சிபார்சுகள் அமுலாகி வருவதோடு நீண்டகால திட்டங்களை அமுல்படுத்த கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறிய அமைச்சர் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என்று கருதவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனிதஉரிமை பேரவை குறித்தும் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர உள்ள பிரேரணை குறித்தும் வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் எமக்கு இதுவொன்றும் புதிய விடயமல்ல. புலிகள் ஒழிக்கப்பட்ட நாள் தொடக்கம் காலத்துக்குக் காலம் அழுத்தங்கள் வரவே செய்தன.

யாரின் அழுத்தம் காரணமாகவும் அன்றி யுத்தகால நிலைமைகள் குறித்து ஆராய ஜனாதிபதி தாமாகவே நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நியமித்தார். அதிலுள்ள சிபாரிசுகள் குறுங்கால, மத்திய கால, நீண்ட கால திட்டங்களாக செயற்படுத்தப்படுகின்றன. நீண்ட கால திட்டங்களை அமுலாக்க அரசிய லமைப்பிலும் திருத்தம் செய்ய நேரிடும்.

பிரபாகரனுக்காக குரல் கொடுப்போரூடாக வரும் சகல சவால்களையும் தோற்கடிக்க நாம் தயாராக உள்ளோம்.

கடந்த முறை எமக்கு எதிராகவே இந்தியா, வாக்களித்தது. எமது நெருங்கிய நட்பு நாடான இந்தியா எமக்கு பல தடவைகளில் உச்சளவில் உதவியுள்ளது. தமது சர்வதேச அரசியல் கொள்கைப்படி இம்முறை அந்தநாடு முடிவு எடுக்கும். ஆனால் எமக்கெதிரான பிரேரணைகளை முறியடித்து வெற்றிகொள்ளும் நம்பிக்கை எமக்குள்ளது. இதற்காக கடந்த காலங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவிகள் பெறப்பட்டன. இம்முறையும் தேவையெனின் அவற்றின் உதவி பெறப்படும்.

30 வருட யுத்த முடிவில் எமக்கெதிராக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. நாட்டு பிரச்சினையை தீர்க்க எமது அரசு நேர்மையுடன் செயற்பட்டு வருகிறது. எமது மனசாட்சிக்கு உட்பட்டு நேர்மையாக நடந்து வருகிறோம்.

புலிகளுக்கு அன்று உதவிய சர்வதேச கட்டமைப்புகள் இன்றும் இயங்குகின்றனர். அதனுடன் தொடர்புள்ளவர்கள் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன. இந்த நிலை சில வருடங்கள் தொடரலாம்.

எமது நாட்டில் கொலைகள் செய்யவும் சமாதான நிலைமையை குழப்பவும் நாட்டைத் துண்டாடவும் டயஸ் போராக்கள் செயற்பட்டு வருகின்றன. கடலுக்கு வெளியில் இருந்து இவை செயற்படுகின்றன என்றார்.

இதேவேளை அரசியலமைப்பை திருத்துவது குறித்து ஆராய்வதற்காக விரைவில் பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசியலமைப்பை முழுமையாக மாற்றுவதா சில பிரிவுகளை மட்டும் திருத்துவதா என்பது குறித்து தெரிவுக்குழுவில் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அரசியலமைப்பை திருத்துவது குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க இருப்பதாக ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply