வணிகத்தில் லஞ்சம் கொடுப்பது குற்றமில்லை: இத்தாலி முன்னாள் பிரதமர்
வணிக நடவடிக்கைகளின்போது லஞ்சம் கொடுப்பது உலக அளவில் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அது குற்றமில்லை என்று இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி தெரிவித்துள்ளார். முக்கிய பிரமுகர்களுக்கு ரூ. 3,600 கோடி மதிப்பில் 12 நவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற இந்தியாவில் உள்ளவர்களுக்கு இத்தாலி நிறுவனமான ஃபின்மெக்கனிகா ரூ. 360 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இத்தாலி நிறுவன அதிகாரி கியூசெப் ஒர்சி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கியூசெப் ஒர்சிக்கு ஆதரவாக இத்தாலி முன்னாள் பிரதமர் குரல் கொடுத்துள்ளார்.இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு சில்வியோ பெர்லஸ்கோனி கூறியதாவது லஞ்சம் என்பது நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயம். அவசியம் ஏற்படும் தருணங்களில் லஞ்சம் அளிக்கப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இது குற்றமில்லை.
இந்தியாவில் உள்ளவர்களுக்கு பணம் கொடுத்தது குறித்து நாம் பேசுவதற்கு காரணம், அது அந்நாட்டில் விதிமுறைப்படி தவறு என்றிருப்பதால்தான். உலக அளவில் இத்தாலி நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை விசாரணை அமைப்புகள் ஆய்வு செய்ய தொடங்கியிருப்பது பொருளாதார ரீதியாக தற்கொலைக்கு ஒப்பானது.
கியூசெப் ஒர்சியை கைது செய்திருப்பது, பிறரை துன்புறுத்தி இன்பமடைவதைப் போன்ற செயலாகும். இந்நடவடிக்கை உலக அளவிலான இத்தாலி நிறுவனங்களின் வணிகத்தைப் பாதிக்கும். இனிமேல் “ஃபின்மெக்கனிகா, எனி (எண்ணெய் நிறுவனம்), எனெல் (எரிசக்தித் துறை நிறுவனம்) ஆகியவற்றுடன் வணிகத்தில் ஈடுபட யாரும் முன்வர மாட்டார்கள். இது ஒரு ஒழுக்கநெறி சார்ந்த நடவடிக்கை எனக் கூறுவது நகைப்புக்கிடமானது. இது போன்ற ஒழுக்கநெறிகளை பின்பற்ற முயன்றால், உலக அளவில் தொழில் முனைவோராக உங்களால் செயல்பட முடியாது” என்றார் பெர்லஸ்கோனி.
இதற்கிடையே கியூசெப் ஒர்சியின் வழக்குரைஞர் எனியோ அமாதியோ, இத்தாலியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,ஒர்சியை கைது செய்ததை அரசு நியாயப்படுத்த முடியாது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் முரண்பாடானதாக உள்ளன” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply