ஹலால் சான்றிதழை விலக்கிக் கொள்ள முடியாது: உலமா சபை

85 சதவீதமான சிங்கள வர்த்தகர்கள் ஹலால் சான்றிதழை பெற்றுக் கொண்டுள்ளனர். ஹலாலுக்கு எதிரான குறிப்பிட்ட சிலரின் எதிர்ப்பினால் அனைத்து வர்த்தகர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஹலாலுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகவும் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முடிவிற்கு கொண்டு வர வேண்டும். எனவே ஹலால் சான்றிதழை விலக்கிக் கொள்ள முடியாது என்று அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்யத் உலமா சபையின் அம்பாந்தோட்ட கிளைத் தலைவர் மௌலவி எம். அர்க்கம் கூறுகையில், இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகள் குறிப்பிட்ட சிலரினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதில் ஒன்றே ஹலால் விவகாரம். ஹலால் சான்றிதழினால் பௌத்த மக்களுக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லை. தாய்லாந்து போன்ற நாடுகளில் அரச அனுசரணையுடன் ஹலால் சான்றிதழ் விநியோகிக்கப்படுகின்றது.

நவீன காலத்திற்கு ஏற்ப உணவு வகைகள் பொதியிடப்பட்டு வருவதனால் அதன் சுகாதார தன்மையை கருத்தில் கொண்டே ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை யாரும் தவறாக அர்த்தப்படுத்தக் கூடாது. அரசாங்கத்தின் பல தரப்புக்களுடனும் ஹலால் விவகாரம் குறித்து பேசியுள்ளோம். ஏற்றுமதி வியாபாரத்தில் ஈடுபடும் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு ஹலால் சான்றிதழ் இன்றியமையாததாகவே அமைந்துள்ளது. இதனை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் ஏற்றுக் கொண்டுள்ளார். சர்வதேச ஹலால் சம்மேளனத்தின் அங்கீகாரத்துடனேயே உலமா சபை மேற்படி சான்றிதழை வழங்குகின்றது. இதைத் தவிர உலமா சபை முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவிச் செய்வதாக கூறி பிரசாரம் செய்வது முற்றிலும் தவறானது. அல்கொய்தா மற்றும் தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு உலமா சபை நிதியுதவி வழங்குவதாக கூறும் குற்றச்சாட்டு அடிப்படைத் தன்மையற்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply