அரசுக்கு வழங்கும் ஆதரவை மீள்பரிசீலனை செய்ய வேண்டி வரும் – ஹிஸ்புழ்ழா எச்சரிக்கை

அரசாங்கம் தொடர்ந்தும் மௌனமாக இருந்தால் முஸ்லிம் சமூகம் அரசுக்கு வழங்குகின்ற ஆதரவை மீள் பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்.  கடந்த சில மாதங்களாக பொதுபலசேனா எனும் பெயரில் இங்குகின்ற சிங்கள பேரினவாத இயக்கம் முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையில் குழப்பங்களையும் பிரச்சினைகளையும் உண்டுபன்னுவதோடு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மிக மோசமான நிலையில் செயற்பட்டு வருகின்றது. 

இது தொடர்பாக ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், அரசாங்கத்தின் உயர் அமைச்சர்களிடமும் கட்சித் தலைவர்களிடடமும் தொடர்ச்சியாக நாம் பேசி வருகின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறுவதை கட்டுப்படுத்தப்படும் என்று உறுதி மொழிகள் வழங்கப்பட்ட போதிலும் அவ்வுறுதி மொழி நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதோடு பொதுபல சேனாவினுடைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையிட்டு நாம் மிகவும் மன வேதனையடைகின்றோம்.

அரசாங்கம் பொதுபல சேனா இயக்கத்தின் பின்னால் இருந்து அதன் நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றதா? அவர்களுக்கு ஆதரவு வழங்குவதன் காரணமாகத்தான் அவர்கள் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்களா? எனும் சந்தேகம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

பொதுபல சேனா இயக்கம் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு தொடர்ச்சியாக பல்வேறுபட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. முஸ்லிம்களின் ஹலால் பிரச்சினை ஏற்பட்ட போது அப்பிரச்சினை தொடர்பிலே பல்வேறுபட்ட விமர்சனங்கள் ஏற்பட்டபோது, பாதுகாப்பு அமைச்சு பொதுபல சேனா இயக்கத்தையும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையையும் அழைத்து ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தியது.

இவ்விணக்கப்பாடானது இந் நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் சமூகத்திற்கும் நன்மையாக இல்லாத போதிலும் நாட்டில் இனங்களுக்கிடையே குரோதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அதற்கு நாம் உடன்பட்டோம். மீண்டும் பிபிலியான வர்த்தக நிலையத்தின் மீதான தாக்குதல் மற்றும் குருநாகலையில் ஏற்பட்ட தாக்குதல்களின் போதும் பாதுகாப்பு அமைச்சு தொடர்ச்சியாக முஸ்லிம் தரப்பினர்களையும் பொதுபல சேனாவையையும் அழைத்து மீண்டும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியது.

இவ்வாறு தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா எடுத்துவரும் நடவடிக்கைளுக்குஎதிரான எவ்வித செயற்பாடுகளையும் அரசு எடுக்காமல் இருப்பது மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகின்றது. இது தொடர்பிலே உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், முஸ்லிம்களின் பொருளாதாரம், உடை, சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்மெனவும், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டுமெனவும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றோம்.

பொதுபலசேனா இயக்கமானது சட்டபூர்வமற்ற பொலீஸ் என்று தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டு இவ்வாறு முஸ்லிம்களுக்கெதிராக மிக மோசமான நிலையில் அடிப்படை மனித உரிமைகளை மீறி வர்த்தக நிலையங்களை காவி உடை அணிந்த ஒரு சிலர்தாக்குவதை சிசிடிவி கெமரா பதிவு செய்துள்ள போதிலும் இதுவரை அவர்களுக்கெதிராக தக்க நடவடிக்கைகள் எடுப்பதை தவிர்த்து இருதரப்பாரையும் சமாதானப்படுத்துகின்ற பணியே தொடர்ந்து இடம்பெறுகின்றன.

முஸ்லிம்களின் வர்த்தகத்திற்கு எதிராகவும், மத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், முஸ்லிம்களின் உணர்வுகளை மறுக்கடிப்பதற்கும் இவ்வாறான செயற்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றனவா? எனும் சந்தேகம் முஸ்லிம்கள் மத்தியில் வலுப்பெறுகின்றன.

ஆகவே, அரசாங்கம் உடனடியாக இவ்வாறான நடவடிக்கைகளைகட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுபலசேனா இயக்கத்தினுடைய நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் சட்டத்திற்கு முன்னிலையில் அனைவரும் சமம் எனும் அடிப்படையில்சட்டத்தை தங்களது கைகளில் எடுத்துக்கொண்டு முஸ்லிம்களுக்கெதிராக செயற்படுகின்ற யாராக இருந்தாலும் கைது செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதே நேரம் தொடர்ந்தும் அரசாங்கம் இவ்வாறு மௌனமாகவும் அமைதியாகவும்இருந்தால் தொடர்ந்தும் முஸ்லிம்கள் அரசாங்கத்திலே இருப்பதை பற்றி மீள் பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படுவதோடு முழு முஸ்லிம் சமூகமும் அரசாங்கத்திற்கு வழங்கி வருகின்ற ஆதரவை மீள எடுத்துக்கொள்வது தொடர்பாகவும் பரிசீலனை செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவர்.

ஆகவே, தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் உடனடியாக சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி முஸ்லிம் சமூகத்தினுடைய உடமைகளையும் அவர்களுடைய மத நடவடிக்கைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் என்று எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply