இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவு இல்லை : அவுஸ்திரேலியா

இலங்கை விடயத்தில் தனது நலன்களுக்காக அவுஸ்திரேலியா வளைந்து கொடுக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்புக்கு இந்த மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான அமர்வு மார்ச் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் இரத்தம் தோய்ந்த போர் இறுதி நாட்களில் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் மனித உரிமைகளை வலியுறுத்தியும் சுயாதீன சர்வதேச விசாரணைணை கோரும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

கடந்த காலங்களில் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான அவுஸ்திரேலியா உறுதியாக இருந்து வந்தது. ஆனால் அவுஸ்திரேலிய அரசின் புகலிடம் கோருவோர் தொடர்பான கொள்கைளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை ஆர்வமாக உள்ள நிலையில், அவுஸ்திரேலியா தனது முன்னுரிமைகளுக்காக வளைந்து கொடுக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு கதவை திறந்து விட்டு, அவுஸ்திரேலியா தனது மனித உரிமைகள் தொடர்பிலான நற்பெயரை கொடுத்து கொள்ளக் கூடாது. மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நாங்கள் அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்புக்கு கூறுகிறோம். இலங்கையில் நடந்த திட்டமிட்ட துஷ்பிரயோகங்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் அமைச்சர் பிஷப்பிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார். தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னதாக இலங்கையின் கள நிலவரங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களுக்கு அவுஸ்திரேலியா இணை அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிஷப் தெரிவித்துள்ளார். இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு ஆக்கபூர்வமான முறையில் பங்களிப்பினை வழங்க வேண்டியது அவசியமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply