18வது சார்க் உச்சி மாநாடு நேபாளத்தில் ஆரம்பம்; ஜனாதிபதி மஹிந்த இன்று உரை

காத்மண்டுவில் இன்று நடைபெறவுள்ள 18 வது ‘சார்க்’ தெற்காசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுக் காலை நேபாளத்திற்கான விஜயத்தை மேற்கொண்டார். நேபாளத்தின் ‘திரிபுவன’ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதிக்கு அங்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளதுடன் இன்று 26ம் திகதி சார்க் பிராந்தியக் கூட்டமைப்பு உச்சிமாநாடு ஆரம்பமாகி நாளை மாநாடு நிறைவுபெறவுள்ளது. இன்று காலை ஆரம்பமாகும் மாநாட்டு அமர்வில் சார்க் நாடுகளின் அனைத்துத் தலைவர்களும் பங்கேற்கவுள்ளதுடன் ஜனாதிபதி அவர்கள் விசேட உரையாற்றவுள்ளார். நாளை வியாழக்கிழமை நாட்டு தலைவர்களுக்கிடையிலான தனித்தனி சந்திப்புகள் இடம்பெற்று நாளை பிற்பகலில் மாநாடு நிறைவுபெறவுள்ளது.

அதனையடுத்து மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இருதரப்புப் பேச்சுவார்த் தைகளை நடத்தவுள்ளார்.

நேற்று கெளதம புத்தரின் பிறந்த இடமான லும்பினிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மாயா தேவி ஸ்ரீலங்கா ராமய விஹாரை, பெளத்த பல்கலைக்கழகம் மற்றும் துட்டகைமுனு யாத்திரிகள் இல்லம் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் நேற்றைய இந்த விஜயத்தில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன வெளி விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷேனுகா செனவிரத்ன ஆகியோரும் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கெளதம புத்தரின் பிறப்பிடமான லும்பினியானது மிகப்பெரிய தொல்லியல் சார்ந்த சமயம் சார்ந்த குறிப்பாக பெளத்தர்களுக்கு முக்கியத்துவமுடைய யுனெஸ்கோ கலாசார மரபுத் தலமாகும். பின்னைய காலத்தில் ‘ஞானம் பெற்ற புத்தராக மாறிய இளவரசர் சித்தார்த்த கெளதமர் கி.மு. 623 ல் நேபாளத்தின் லும்பினியில் பிறந்தார். புதிதாகப் புனரமைக்கப்பட்ட மாயா தேவி ஆலயம் ஆலயத்திற்குப் பின்னாலுள்ள அஷோக தூண், இளவரசர் சித்தார்த்த கெளதமவின் பிறப்பிற்கு முன்னர் மாயா தேவி நீராடியதாகத் தெரிவிக்கப்படும் ஷக்கிய புஸ்கரின் ஏரி ஆகியன லும்பினியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகும்.

கெளதம புத்தரின் தாயாருக்கு அர்ப்பணிக் கப்பட்டு, அவரின் பெயரிடப்பட்டுள்ள மாயா தேவி ஆலயமே லும்பினியிலுள்ள மிக முக்கியமான ஆலயமாகும்.

இது கெளதம புத்தரின் பிறப்பிடமாக உள்ளதால், பெளத்தர்களுக்கு மிகப் புனிதமான நான்கு இடங்களில் இந்த ஆலயமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply