அமெரிக்கா இலங்கையின் உள்விடயங்களில் தலையிடுவதாக மஹிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு

மைத்திரிபால சிறிசேனெ, அமெரிக்கா ஹவாட் பல்கலைக்கழக விருதுக்காக சென்று வந்த பின்னர் மனம் மாறிவிட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு ஜூன் மாதத்தில் “2013 ஹெல்த் லீடர்” விருது மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டது. இதற்காக அவர் அமெரிக்காவுக்கு சென்று வந்த பின்னரே அரசியலில் மனம் மாறியுள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று கூறுகிறது.

இதன்போது மைத்திரிபாலவுடன் இலங்கையின் அரசாங்கம் மாற்றம் குறித்து உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்கலாம் என்பதே ஜனாதிபதியின் கருத்தாக அமைந்துள்ளது.

எனினும் 2011ம் ஆண்டு இலங்கைக்கான மெரிக்க தூதுவர் பெற்றீசியா புட்டின்ஸை சந்தித்த பின்னர் அந்த தகவலை மஹிந்தவுக்கு தெரிவித்திருந்தார்.

இதனையடுத்தே அமெரிக்கா இலங்கையின் உள்விடயங்களில் தலையிடுவதாக மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார் என்பதையும் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பொறுத்தவரை அமரிக்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பதாக குற்றம் சுமத்தி வருகிறது.

முன்னர் சரத் பொன்சேகாவை பயன்படுத்தி அதில் தோல்விகண்ட பின்னர் தற்போது மைத்திரிபாலவை அமெரிக்கா தெரிவு செய்துள்ளதாகவும் அந்த முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தநிலையில் மைத்திரியை பின்னால் இருந்து இயக்குவது அமெரிக்காவாக இருந்தால், வரும் நாட்களில் பல சம்பவங்களை காணக்கூடியதாக இருக்கும். அவை, உண்மை சம்பவங்களை வெளிக்கொணருவதாக அமையும் என்றும் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


Both comments and pings are currently closed.

Comments are closed.