எதிர்காலத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஆக மலாலா விருப்பம்

பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடிய பள்ளிச்சிறுமி மலாலாவை தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். உயிருக்கு போராடிய அவர் லண்டனில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். அவரது பெண் கல்விச் சேவையை பாராட்டி இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக போராடும் இந்தியாவை சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பரிசு நார்வேயில் உள்ள ஆஸ்லோவில் இன்று இவர்கள் இருவருக்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது.இந்த நிலையில் கைலாஷ் சத்யார்த்தியுடன் இணைந்து ஆஸ்லோவில் மலாலா யூசுப்சாய் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:–

‘‘கைலாஷ் சத்யார்த்தியுடன் சேர்ந்து இந்த விருது பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதை எனக்கு கிடைத்த பெரிய கவுரவமாக கருதுகிறேன். இந்த விருது எனக்கு மிகவும் முக்கியமானது. இதனால் எனக்கு மிகுந்த நம்பிக்கை, தைரியம் ஏற்பட்டுள்ளது.

முன்பை விட இப்போது மிகவும் பலசாலியாக இருப்பதாக உணர்கிறேன். ஏனெனில் என்னில் பலர் இருக்கிறார்கள். இந்த விருது வழங்கி இருப்பதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்து விட்டன. கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

எனது சமூகத்துக்கு உதவ வேண்டியது தலையாய கடமையாகும். எனது பெண் கல்வி பிரசாரத்தின் மூலம் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு செல்வதை பார்க்க முடிகிறது.

எனது நாட்டுக்கு (பாகிஸ்தானுக்கு) சேவை செய்ய வேண்டும் என்ற கனவு உள்ளது. பாகிஸ்தானை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டும். அனைத்து குழந்தைகளும் கல்வி அறிவு பெற வேண்டும். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ என்னை கவர்ந்தவர்.

எதிர்காலத்தில் அரசியலில் நுழைந்து அவரைப் போன்று பிரதமர் ஆக வேண்டும். நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். அதை நிச்சயம் நிறைவேற்றி காட்டுவேன்.

எனது படிப்பை இங்கிலாந்தில் முடிப்பேன். இந்த பரிசளிப்பு விழாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்கவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது’’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply