கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் ஈ.பி.டி.பி காடையர்களே: விந்தன் கனகரத்தினம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக இம்மாதம் நான்காம் திகதி யாழ் தீவகத்தில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் ஈ.பி.டி.பி காடையர்களே என வடக்கு மாகாணசபை உறுப்பினரான விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் தீவுப்பகுதியில் கடந்த நான்காம் திகதி எனது தலைமையில் வேலணை நேதாஜி சனசமூக நிலையத்திற்கு முன்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம்.
இதன்போது அவ்விடத்திற்கு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர், பத்து யார் தூரத்தில் தங்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இறங்கி நின்று கொண்டு தங்கள் தொலைபேசி மூலம் யாருக்கோ அழைப்பை எடுத்து அச்சுறுத்தும் பாணியில் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது அவ்விடத்தில் குடிநீர் குழாய் மூலம் குடிநீர் எடுத்துக்கொண்டிருந்த மக்கள் எம்மைப் பார்த்து,
“இவங்கள் கொலைகாரர், கொள்ளைக்காரர் மக்களை தொடர்ந்து அச்சுறுத்துபவர்கள் நீங்கள் இவ்விடத்தில் நிற்க வேண்டாமென்று கூறியதற்கிணங்க நானும் என்னோடு வந்த கூட்டமைப்பினரும் நாம் வந்த வாகனத்தில் ஏறி புறப்பட்டோம்.
அப்போது அம்மூவரும் எங்கள் வாகனத்தின் மீது கற்களால் தாக்குதல் நடத்தி வாகனத்தை சேதப்படுத்தியதோடு மிகவும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களால் எம்மை திட்டிக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.
சம்பவம் தொடர்பாக அன்றைய தினமே நாம் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் எம்மிடமிருந்த ஆதாரங்களை வைத்து முறைப்பாட்டை பதிவு செய்திருந்தோம்.
இத்தாக்குதல் சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டவர்களை தற்பொழுது தீவக மக்கள் எமக்கு தொலைபேசியூடாகவும் நேரடியாகவும் அடையாளம் காட்டியுள்ளனர்.
அந்த வகையில் வேலணை பங்களாவடியில் ஈ.பி.டி.பி அலுவலகத்தில் வசிப்பவரும் அதே அலுவலகத்திற்கு அருகில் குடியிருப்பவரும் அவருடைய மனைவி வேலணையில் சமுர்த்தி உத்தியோகத்தராக பணியாற்றி வருவதாகவும் இரண்டாவது நபர் புங்குடுதீவுப் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் அதிபராக இருக்கும் ஒருவரின் மகன் எனவும் இவரே குறித்த மோட்டார் சைக்கிளிற்கும் உரிமையாளர் ஆவார் எனவும்
மூன்றாவது நபர் மண்டைதீவைச் சேர்ந்தவர் அவர் தற்பொழுது வேலணையிலுள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்திலே தங்கியிருக்கின்றார் என்றும். மக்களின் தகவலை அடுத்து குறித்த மூவரின் பெயர்களோடு அவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி இலக்கத்தையும் 21ம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் கொடுத்து நாம் மீண்டுமொரு முறைப்பாட்டை ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளோம்.
ஊர்காவற்றுறை பொலிஸார் சந்தேக நபர்களின் மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.
இவர்களிடமிருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்ய வேண்டுமெனவும் வேலணையிலுள்ள ஈ.பி.டி.பி முகாமுக்குள் இருந்து எங்கள் மீது தாக்குதல் நடாத்த உத்தரவு பிறப்;பித்தவர்களையும் கைது செய்ய வேண்டுமெனவும் நாம் பொலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
எங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட திகதிக்கு இரு தினங்களிற்கு முன்பு ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் அவ்விடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவரையும் அவரது வாகனத்தையும் தாக்க இவர்கள் முற்பட்டிருக்கிறார்கள்.
திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் வாகனத்தில் கண்காணிப்பு கமெரா பொருத்தப்பட்டிருந்ததால் அன்றைய தினம் அவர்கள் விஜயகலா மீதான தாக்குதல் நடவடிக்கைகளை கைவிட்டிருந்தனர் என மக்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply