பிரதமரை சந்திக்க ஒத்துழைத்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி: டெல்லி புறப்படும் முன் விஜயகாந்த் பேட்டி

டெல்லி புறப்பட்டு செல்லும் முன்பு விமான நிலையத்தில் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:–இது அரசியல் பிரச்சினை அல்ல. மக்கள் பிரச்சினை. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களையும் ஒரே நாளில் சந்தித்து அழைத்ததும் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை பிரதமரிடம் நேரில் வலியுறுத்துவோம். நிச்சயமாக நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.நிலம் கையகப்படுத்துதல் சட்டம் உள்ளிட்ட மேலும் சில மக்கள் பிரச்சினைக்காகவும் பிரதமரிடம் மனு கொடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் விஜயகாந்திடம் பா.ம.க. கலந்து கொள்ள வில்லையே அவர்களை சந்திக்கவில்லையா என்று கேட்டபோது, ‘‘30 முறைக்கு மேல் தொடர்பு கொண்டேன்’ என்றார்.பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை கூறியதாவது:–எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் விஜயகாந்த் எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து பிரதமரை சந்திக்க வேண்டும் என்று முயற்சி எடுத்துள்ளார். பிரதமரும் இன்று மதியம் 12.30 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கி இருக்கிறார்.எந்தவித பாகுபாடும் இல்லாமல் எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து பிரதமரை சந்திப்பது ஒரு ஆரோக்கியமான அரசியல் அணுகுமுறை. இந்த முயற்சியை ஆளும் கட்சி செய்து இருக்க வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தை கூட கூட்டாதது வருத்தம் அளிக்கிறது.மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. அப்படியிருந்தும் மறுபடியும் மறுபடியும் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு கூறி வருவதால் தமிழக மக்களின் அச்சத்தை போக்கவும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் பிரதமரை சந்திக்கிறோம்.நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை பொறுத்தவரை அது வளர்ச்சிக்கான திட்டம் தான்.

ஆனால் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம் இருக்கும். அந்த வகையில் விஜயகாந்த் பல கோரிக்கைகளை வைக்கலாம்.எங்களை பொறுத்தவரை தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் நலனை ஒரு போதும் பாதிக்க விடமாட்டோம். விவசாயிகள் நலனுக்காக நடத்தப்பட்ட அனைத்து கட்சிகள் கூட்டத்திலும் பா.ஜனதா பங்கேற்றது. மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்.இவ்வாறு அவர் கூறினார்.விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:–கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது, ஆந்திர வனத்துறை 20 தமிழர்களை சுட்டுக் கொன்றது ஆகியவை முக்கியமான பொதுப் பிரச்சினை என்பதால் அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் விஜயகாந்துடன் பிரதமரை சந்திக்க செல்கிறேன்.தமிழக அரசு இந்த முயற்சியை மேற்கொண்டு இருக்க வேண்டும். இந்த முயற்சிக்கு பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் மக்கள் பிரச்சினைதான் முக்கியம். மக்கள் பிரச்சினையில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதை இது எடுத்து காட்டும். தமிழக அனைத்து கட்சிகளும் பிரதமரை சந்திப்பதால் நிச்சயம் மரியாதை தருவார் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply