1000 டொன் உதவிப் பொருட்களை ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு வழங்க துருக்கி நடவடிக்கை

1000 டொன் உதவிப் பொருட்களை ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு வழங்க துருக்கி நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக துருக்கி ஜனாதிபதி ரஜப் தய்யுப் அர்தூகான் தெரிவித்துள்ளார். ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன.ரோஹிங்ய விவகாரம் குறித்து நேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் பேசிய அவர்:-

மியன்மாரின் ராகின் நாம் அறிந்திராத ஒரு பிரதேசம் அல்ல. நாம் பல தசாப்தங்களாக அங்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். ராகின் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை மறைத்துவிடுவதற்கான சில முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதையும் நாம் அறிகிறோம்.

இந்த பிரதேசத்தில் மனிதநேய உதவிகளை வழங்கும் எந்தவொரு நிறுவனமும் அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த ரமழானில் இந்த பிரதேசத்தில் இயங்கிய ஒரேயொரு வெளிநாட்டு அமைப்பு துருக்கியின் TIKA மனிதநேய அமைப்பாகும். இப்போதும், இவ்வமைப்பு இங்கு தொடர்ந்தும் இயங்கி வருகின்றது.

மியன்மார் வன்முறையிலிருந்து தப்பி பங்களாதேஷ் வந்துள்ள ரோஹிங்கிய அகதிகளுக்கு உதவி வழங்குவதற்காக சென்றுள்ள நமது வெளிநாட்டு அமைச்சர் மவ்லூட் காவுஸ்ஒக்லூவுடன், எனது மனைவி ஆமீனாவும், மகன் பிலாலும் இணைந்துகொள்ளவுள்ளனர்.

இந்த உலகு பெருமளவிலான துன்பத்தைப் பார்த்துள்ளது. நாம் தொடர்ந்தும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்போம். இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டி நாம் தொடர்ந்தும் அழைப்பு விடுப்போம்.

ரோஹிங்கிய விவகாரம் குறித்து, 30 முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுடன் நான் பேசியுள்ளேன். செப்டம்பர் 7-11 திகதிகளில் கஸகஸ்தான் தலைநகர் அஸ்டானாவில் நடைபெறும் இஸ்லாமி ஒத்துழைப்பு மாநாட்டில் (OIC) இந்த விவகாரம் குறித்து நாம் பேசுவோம். செப்டம்பர் 20 ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையிலும் பேசுவோம் எனத் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply