தசரா விடுமுறைக்கு பிறகு பரோல் கோரி விண்ணப்பிக்க சசிகலா திட்டம்: பெங்களூரு அதிமுக வட்டாரம் தகவல்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ள கணவர் நடராஜனை பார்ப்பதற்காக தசரா விடுமுறைக்கு பிறகு பரோல் கேட்க சசிகலா திட்டமிட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது கணவர் நடராஜன் சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கவலைக்கிடமான நிலையில் உள்ள அவரைப் பார்க்க, கடந்த வாரம் சசிகலா பரோலில் சென்னை செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் பரோலில் வெளியே செல்வதற்கு ஏராளமான விதிமுறைகள் இருப்பதால், அவர் பரோலுக்கு விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனிடையே, சிறைத்துறை நிர்வாகம், நீதிமன்றம் ஆகியவற்றுக்கு தசரா விடுமுறை விடப்பட்டுள்ளன. எனவே இப்போது பரோல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது.
தசரா விடுமுறை முடிந்த பிறகு, சிறை அதிகாரிகள் பணிக்கு திரும்பியதும் சசிகலா அவசர பரோல் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “கர்நாடகாவில் தற்போது தசரா விடுமுறை காலம் என்பதால் சசிகலா பரோலுக்கு விண்ணப்பிக்கவில்லை. வரும் திங்கள்கிழமைக்கு பிறகு நடராஜனின் மருத்துவ சான்றிதழை தாக்கல் செய்து, சசிகலா முறைப்படி பரோலுக்கு விண்ணப்பிக்க இருக்கிறார்.
கர்நாடக சிறைத்துறை விதிமுறைகளின்படி அவசர பரோலில் 15 நாட்கள் வரை செல்ல முடியும். ஆனால் எத்தனை நாட்கள் பரோல் கோருவது என்பது குறித்து தனது வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினரிடம் சசிகலா ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார்” என்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply